தென்காசியில் டெங்கு பரவல்.. அடுத்தடுத்து பலியான இரு பெண்கள்.. பெரும் பீதியில் பொதுமக்கள்!
Tenkasi Woman Dies Dengue Fever : தென்காசி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிறுமி உயிரிழந்த நிலையில், தற்போது 27 வயது பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால், கடையநல்லூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் அச்சம் அதிகரித்து உள்ளது .
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், போகநல்லூர் பகுதியில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் இலங்கையை சேர்ந்த சுமார் 150- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சுமார் ஒரு மாதங்களுக்கு மேலாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் இருந்து வரும் ராஜன் மற்றும் சைலா ஸ்ரீ தம்பதியின் 13 வயது மகளான ரிஹானா மேரிக்கு திடீரென டெங்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டு பரிதாபமாக உயிரிந்தார். இந்த நிலையில், தினேஷ் என்பவரின் மனைவி நர்மளா ( 27 வயது) என்பவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டு உடல்நிலை கடும் பாதிப்புக்கு உள்ளானது.
பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி
இதன் காரணமாக அச்சமடைந்த அவரது கணவர் அவரை உடனடியாக கடையநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் டெங்கு பாதிப்பு இருப்பதாக கூறி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். அதன் அடிப்படையில், நர்மளா தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, நர்மளா டெங்கு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மேலும் படிக்க: சேலத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.. 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் அதிரடி கைது!




நெல்லை அரசு மருத்துவமனையில் பெண் பலி
இந்த நிலையில், நர்மதாவின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதன் காரணமாக, தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நர்மதா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நர்மதா பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே, தென்காசி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 13 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், தற்போது பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால், இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு மையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அச்சம் அதிகரித்துள்ளது.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை
இது குறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் நகராட்சி ஊழியர்கள் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு தொடர்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில், மறுவாழ்வு முகாம் அருகே பல்வேறு ஊர்களில் இருந்து குப்பைகள் கொட்டுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கொசு உற்பத்தி அதிகமாகி டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க: சுதந்திர தின விடுமுறை நாளில் விஸ்வரூப விற்பனை.. 2 நாள்களில் ரூ. 423 கோடிக்கு மது விற்று டாஸ்மாக் நிர்வாகம் சாதனை!