சுதந்திர தின விடுமுறை நாளில் விஸ்வரூப விற்பனை.. 2 நாள்களில் ரூ. 423 கோடிக்கு மது விற்று டாஸ்மாக் நிர்வாகம் சாதனை!
TASMAC liquor sales in Tamil Nadu : தமிழகத்தில் சுதந்திர தின விடுமுறைக்கு முந்தைய நாள் மற்றும் பிந்தைய நாளில் பல்வேறு மண்டலங்களில் ரூ. 423 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் 15- ஆம் தேதி ( சனிக்கிழமை) மதுக்கடைகளுக்கு சுதந்திர தின விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் முந்தைய நாளாக ஆகஸ்ட் 14- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மற்றும் அதற்கு மறு நாளான ஆகஸ்ட் 16- ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மது விற்பனை நடைபெற்றது. இதில், ஆகஸ்ட் 14- ஆம் தேதி சென்னை மண்டலத்தில் ரூ.55.39 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ. 39.89 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.43.34 கோடிக்கும், கோயம்புத்தூர் மண்டலத்தில் ரூ.32.20 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றது. மேற்கண்ட 5 மண்டலங்களில் நடைபெற்ற மது விற்பனையில் மொத்தம் ரூ.213.78 கோடிக்கு மதுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதே போல, ஆகஸ்ட் 16- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) சென்னை மண்டலத்தில் ரூ.55.40 கோடிக்கும், கோயம்புத்தூர் மண்டலத்தில் ரூ.34.07 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றது.
மொத்தத்தில் ரூ.423 கோடிக்கு மது விற்பனை
இதேபோல, சேலம் மண்டலத்தில் ரூ.38.64 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.42.48 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றிருந்தது. மேற்கண்ட 5 மண்டலங்களில் உள்ள மதுக்கடைகளில் மொத்தமாக ரூ.209.22 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று இருந்தது. சுதந்திர தினத்தன்று அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள், டாஸ்மாக் மற்றும் பார்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால், விடுமுறைக்கு முந்தைய மற்றும் அடுத்த நாட்களில் என 2 நாட்களில் தமிழகத்தில் மொத்தமாக ரூ.423 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று உள்ளது.
மேலும் படிக்க: இளைஞர் கன்னத்தில் அறைந்தது குறைந்தபட்ச பல பிரயோகம்.. எஸ்.ஐ.- இளைஞர் மோதல் சம்பவம் குறித்து காவல் துறை விளக்கம்!




ஆன்லைன் மூலமாக ரூ. 9.97 லட்சத்துக்கு மது விற்பனை
இதில், ஆகஸ்ட் 14- ஆம் தேதி ஆன்லைன் வழியாக மட்டும் ரூ.6 லட்சத்து 38 ஆயிரத்துக்கும், ஆகஸ்ட் 16- ஆம் தேதி ரூ.3 லட்சத்து 59 ஆயிரத்துக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த இரு நாட்களிலும் சேர்த்து ஆன்லைன் மூலமாக ரூ.9 லட்சத்து 97 ஆயிரத்துக்கு மது விற்பனை நடைபெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பண்டிகை நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மது விற்பனை அதிக அளவு நடைபெறுவது வழக்கமாகும்.
அரசு விடுமுறை- பண்டிகை காலங்களில் கூடுதல் மது விற்பனை
அந்த வகையில், தீபாவளி பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அதிகளவு மது விற்பனை நடைபெறும். தற்போது, சுதந்திர தினத்தையொட்டி, அதற்கு முன்பு மற்றும் பிந்தைய நாட்களில் தமிழகத்தில் ரூ.423 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவை குறிப்பிட்ட 5 மண்டலங்களில் நடைபெற்ற மது விற்பனை ஆகும்.
மேலும் படிக்க: கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டு கொன்ற சம்பவம்.. குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம்.. வனத்துறை அமைச்சர்!