கோவையில் ஹவுஸ் விசிட் அடித்த காட்டு யானை.. பெரும் பீதியில் தடாகம் பகுதி மக்கள்.. அபாய எச்சரிக்கை!
Coimbatore Wild Elephant : கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒற்றை காட்டு யானை தடாகம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளின் கதவுகளை லாவ கமாக திறந்து உணவு தேடிச் சென்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டம், தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றைக் காட்டு யானை ஒன்று உலாவி வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் அந்த யானை ஊருக்குள் புகுந்தது. அப்போது, அந்த பகுதியில் இருந்த ஒரு உணவகத்தின் ஷட்டரை துதிக்கையால் முட்டி சேதப்படுத்தியது. இதனை தொடர்ந்து, திருவள்ளுவர் நகர் மற்றும் குன்று பெருமாள் கோவில் பகுதியில் அந்த யானை உலா வந்தது. அப்போது, அந்த தெருவில் நின்று கொண்டிருந்த பசுமாட்டை திடீரென விரட்டி விரட்டி தாக்கம் முயன்றது. இந்த நிலையில், அதே ஒற்றைக் காட்டு யானை மீண்டும் திருவள்ளுவர் நகர் குடியிருப்பு பகுதிக்குள் நள்ளிரவில் நுழைந்து வீடுகளில் உணவு தேடிய சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீடுகளின் கதவுகளை லாவகமாக திறந்து செல்லும் யானை
அந்த வீடியோவில், திருவள்ளுவர் நகர் குடியிருப்பு பகுதிக்குள் நள்ளிரவில் புகுந்த அந்த காட்டு யானை அந்த தெருவில் இருந்த ஒரு வீட்டின் கதவை லாவகமாக திறந்து உள்ளே சென்றது. அப்போது, கதவு திறக்கும் சத்தம் கேட்ட நிலையில், வீட்டின் உள்ளே இருந்த பொதுமக்கள் வெளியில் உள்ள மின்விளக்குகளை ஆன் செய்தனர். இந்த வெளிச்சத்தால் யானை அங்கிருந்து பின்வாங்கி வெளியேறியது. பின்னர், அருகில் உள்ள மற்றொரு வீட்டின் கதவை சாதாரணமாக திறந்து உள்ளே சென்று உணவுகள் ஏதேனும் இருக்கிறதா என தேடி பார்க்கிறது.
மேலும் படிக்க: தென்காசியில் டெங்கு பரவல்.. அடுத்தடுத்து பலியான இரு பெண்கள்.. பெரும் பீதியில் பொதுமக்கள்!
சமூகவலைதளங்களில் வீடியோ வைரல்
அங்கும், எதுவும் இல்லாத நிலையில் மீண்டும் அந்த யானை வீட்டில் இருந்து வெளியேறி நடந்து செல்கிறது. வீடுகளின் கதவுகளை மனிதர்களைப் போல அசால்டாக திறந்து உள்ளே சென்று வரும் யானையின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. காட்டு யானைகள் தங்களது எல்லைகளை விரிவு படுத்தி குடியிருப்பு பகுதிக்குள் சர்வ சாதாரணமாக வந்து செல்வது தடாகம் பகுதி மக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
பொது மக்களுக்கு அபாய எச்சரிக்கை
இதன் காரணமாக இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், வீட்டின் கதவுகளை பூட்டி வைக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், பொது மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதற்கு முன்பு ஊருக்குள் வந்து செல்லும் ஒற்றை காட்டு யானையை உடனடியாக அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று தடாகம் பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் படிக்க: தென்காசியில் ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற வனச்சரகர்.. கையும் களவுமாக தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!