லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி வேட்டை.. குப்பை தொட்டியில் பதுக்க முயன்ற லஞ்ச பணம்.. தட்டி தூக்கிய போலீஸ்!
Coimbatore Corporation Office Raid: கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையின்போது, அலுவலக உதவியாளர் லஞ்ச பணத்தை குப்பை தொட்டியில் பதுக்கி வைக்க முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி, ஊராட்சி அலுவலகங்கள் என சுமார் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற சோதனையின் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்திலும் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், கோயம்புத்தூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 9 போலீசார் கொண்ட குழு திடீர் சோதனையில் ஈடுபட்டது. மாலை நேரத்தில் அலுவலக பணிகள் நிறைவடைந்து பண பரிவர்த்தனைகள் நடைபெறும் என்பதால் இந்த சோதனை அதிரடியாக மேற்கொள்ளப்பட்டது. இதில், நகர அமைப்பு பிரிவு, பொறியாளர் பிரிவு, நிர்வாகப் பிரிவு உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களில் ஒரே நேரத்தில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, அலுவலக வளாகத்தில் இருந்த குப்பை தொட்டியில் அலுவலக உதவியாளர் ஒருவர் பணத்தை மறைத்து வைக்க முயன்றார்.
குப்பை தொட்டியில் பதுக்க முயன்ற பணம் பறிமுதல்
இதை பார்த்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை அதிரடியாக பிடித்து சோதனை செய்ததில் கணக்கில் வராத ரூ.12,200 இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், பில் கலெக்டர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கொடுத்து வைத்த பணம் மற்றும் பொதுமக்களிடம் வாங்கிய பணம் என்பது தெரிய வந்தது. மற்ற அலுவலர்களிடம் உரிய கணக்குகள் உள்ளன. இது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: சிவகங்கையில் பரபரப்பு.. காவல் நிலையத்திற்குள் புகுந்து எஸ்.ஐ. மீது தாக்குதல்.. திமுக நிர்வாகி அதிரடி கைது!




அலுவலக அதிகாரிகள்- ஊழியர்களிடம் போலீீசார் விசாரணை
முன்னதாக மத்திய மண்டல தலைவர் மீனா லோகுவின் உதவியாளர் மற்றும் கலெக்டர் அலுவலக பெண் அலுவலர் ஒருவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, அலுவலகத்தில் பணம் தொடர்பில்லாத பெண் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் வெளியே அனுப்பப்பட்டனர். இந்த சோதனையானது இரவு 8 மணி வரை நடைபெற்றது. இதே போல, தமிழக முழுவதும் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனைகள் ரொக்கம் மற்றும் ஜிபே பரிவர்த்தனைகள் என மொத்தம் ரூ.57 லட்சத்து 98 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லஞ்ச ஒழிப்பு துறைக்கு வந்த தொடர் புகார்கள்
அரசு அலுவலகங்களில் வரைபட அனுமதி, சொத்து வரி பெயர் மாற்றம், பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பு, கட்டட நிறைவு சான்றிதழ், மின்சார இணைப்புக்கான தடையில்லா சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெறுவதற்காக பொதுமக்களிடம் லஞ்சம் பெறப்படுவதாக உடல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததன் அடிப்படையில் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மறுவாழ்வு மையமா? மரண மையமா? நெல்லையில் சிறுவன் ரத்த காயங்களுடன் மர்ம மரணம்.. போலீஸ் விசாரணை!