20 கோடி மோசடி: போலீசாருக்கே ‘விபூதி’ அடித்த நபர் கைது – ராயபுரம் பெண் ஆய்வாளர் சஸ்பெண்ட்!
குறைந்த விலையில் தங்கக் காசுகள் மற்றும் வீட்டு மனை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 200க்கும் மேற்பட்டவர்களிடம் 20 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நபரும், அவருக்குத் துணையாக இருந்த பெண் ஆய்வாளரும் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, ஜூன் 14 : சென்னை மாநகர காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள ஒரு மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறைந்த விலையில் தங்கக் காசுகள் மற்றும் வீட்டுமனை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 200-க்கும் மேற்பட்டவர்களிடம் 20 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நபரும், அவருக்குத் துணையாக இருந்த பெண் ஆய்வாளரும் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாருக்கே ‘விபூதி’ அடித்த நபர்
ராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் ஷீலா மேரி. இவர் இதற்கு முன்பாக வடசென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவரது தூரத்து உறவினரான பிரபு மணி என்பவர், ‘விநாயக் எண்டர்பிரைசஸ்’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இதையும் படிக்க : “ஹெல்மெட் இல்லாத விபத்து மரணங்கள்”.. இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்.. மத்திய அரசின் அதிர்ச்சி அறிக்கை!




இந்த நிறுவனத்தின் மூலம் தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும், குறைந்த விலையில் தங்கக் காசுகள் மற்றும் வீட்டுமனைகளை வாங்கித் தருவதாகவும் பிரபு மணி கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார். இந்தத் திட்டங்களை பொதுமக்களிடமும், சக காவல்துறை ஊழியர்களிடமும் பிரபலப்படுத்த ஆய்வாளர் ஷீலா மேரி முன்னின்று செயல்பட்டுள்ளார்.
ஆய்வாளர் ஷீலா மேரியின் அறிமுகத்தால், பிரபு மணி மீது முதலீட்டாளர்கள் அதீத நம்பிக்கை வைத்தனர். குறிப்பாக, ஷீலா மேரிக்கு ஒதுக்கப்பட்டிருந்த காவல்துறை அதிகாரப்பூர்வ வாகனத்திலேயே பிரபு மணி வலம் வந்துள்ளார். கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் காலத்தின்போது, அதே காவல் வாகனத்தில் வைத்து முதலீட்டாளர்களுக்குத் தங்கக் காசுகளை பிரபு மணி வழங்கியுள்ளார். காவல்துறை வாகனத்தில் வந்த நபர் என்பதால், சந்தேகம் ஏதுமின்றி வங்கி மேலாளர்கள் உள்ளிட்ட பலர் தங்களது பணத்தை வாரி முதலீடு செய்தனர்.
2023 முதல் 2024 வரையிலான ஓராண்டு காலத்தில், சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனர். ஆனால், 2024 ஆம் ஆண்டின் இறுதியில் பிரபு மணி திடீரென தனது நிறுவனத்தை மூடிவிட்டு, தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார். முதலீடு செய்த பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறி காலம் கடத்திய அவர், ஒன்றரை ஆண்டுகளாக யாருக்கும் பணத்தைத் திரும்பத் தரவில்லை.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு (EOW) போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், கடந்த செவ்வாய்க்கிழமை பிரபு மணியைக் கைது செய்தனர். ஆரம்பகட்ட விசாரணையில், இவர் சுமார் 20 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க : “விசிக எந்த நேரத்திலும் அமைச்சரவையிலிருந்து வெளியே வரலாம்”.. பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்!
ராயபுரம் பெண் ஆய்வாளர் சஸ்பெண்ட்!
மோசடி செய்யப்பட்ட பணத்தில், ஆய்வாளர் ஷீலா மேரியும் பிரபு மணியும் இணைந்து திருமண மண்டபங்கள் மற்றும் கல்குவாரிகளை வாங்கியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ளது. இதனிடையே, பணியில் கவனத்தைச் செலுத்தாமல் நகை வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டதாக, ஷீலா மேரி மீது கடந்த 2024-லேயே உளவுப்பிரிவு அதிகாரிகள் அறிக்கை அளித்திருந்தனர். தற்போது, காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்திய காரணத்தினால், பெண் ஆய்வாளர் ஷீலா மேரியைப் பணியிடை நீக்கம் செய்து சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் மனோகர் உத்தரவிட்டுள்ளார்.
பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரின் தகவல்படி, விசாரணை முடிவில் ஆய்வாளர் ஷீலா மேரியும் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காவல்துறை அதிகாரியே மோசடி கும்பலுக்குத் துணையாகச் செயல்பட்ட இந்த சம்பவம், காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.