“விசிக எந்த நேரத்திலும் அமைச்சரவையிலிருந்து வெளியே வரலாம்”.. பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்!
அமைச்சரவையில் நீடிப்பது தற்காலிகமானது என்பதை உணர்த்தும் வகையில் பேசிய திருமாவளவன், "எந்த நேரத்திலும் எங்களால் அமைச்சரவையில் இருந்து வெளியே வர முடியும். வர முடியாது என்று சட்டம் ஏதும் இல்லை. அப்படி டிட்டாச்சடாக இருந்து அரசியல் செய்யும் ஆற்றல் விசிக-விற்கு இருக்கிறது" என்றார்.
சென்னை, ஜுன் 14: தமிழக வெற்றிக் கழகத்தின் சந்தேகத்தைப் போக்கவே நாங்கள் அமைச்சரவையில் தற்காலிகமாக இடம் பெற்றோம், எந்த நேரத்திலும் அமைச்சரவையிலிருந்து எங்களால் வெளியே வர முடியும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். அமைச்சரவையில் விசிக இணைந்தது குறித்து திருமாவளவன் விளக்குகையில், “நாங்கள் ஏன் கடைசியாக இந்த அமைச்சரவையில் சேர முடிவு செய்தோம் என்றால், தவெக தரப்பிற்கு ஒரு சந்தேகம் இருந்தது. இடதுசாரிகளும் வெளியில் நிற்கிறார்கள், திருமாவளவனும் வெளியில் நின்றால் எந்த நேரத்திலும் அரசுக்கு நெருக்கடி வரலாம்; திடீரென அவர்கள் ஆதரவை வாபஸ் பெற்றால் என்ன செய்வது என்ற பயம் அவர்களுக்கு இருந்தது” என்று குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கவா? அவருக்கே Confidence இல்லையா? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
தவெகவிடம் இருந்து விலகி இருக்க முடியும்:
தவெகவினரின் அந்த சந்தேகத்தையும் தயக்கத்தையும் போக்குவதற்காகவே அமைச்சரவையில் இணைந்ததாக அவர் தெளிவுபடுத்தினார். தொடர்ந்து, கூட்டணியில் இருந்துகொண்டே தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கலாமா என்று சிலர் விமர்சிப்பது குறித்துப் பேசிய அவர், “அப்படி ஒரு நிலைப்பாட்டை எங்களால் ஏன் எடுக்கக் கூடாது? நாங்கள் வெறுமனே ஆதரவு தெரிவிக்கிறோம், அதே நேரத்தில் எங்களை விலக்கி வைத்துக் கொள்கிறோம்” என்றார்.
விசிக தனித்து இயங்க முடியும்:
மேலும், “இன்று அமைச்சரவையில் இருந்தாலும் கூட எங்களால் தனித்து இயங்க முடியும், விலகியே இருக்க முடியும். அவர்கள் ஆட்சி அமைக்க நாங்கள் ஆதரவு தந்தோம், அதற்கான ஒரு வெகுமதியாக எங்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார்கள், அவ்வளவுதான். அமைச்சரவையில் சேர்ந்துவிட்டதாலேயே நாங்கள் முழுமையாக அந்தக் கூட்டணியில் பிணைக்கப்பட்டுவிட்டோம் என்று அர்த்தமல்ல” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம்:
அமைச்சரவையில் நீடிப்பது தற்காலிகமானது என்பதை உணர்த்தும் வகையில் பேசிய திருமாவளவன், “எந்த நேரத்திலும் எங்களால் அமைச்சரவையில் இருந்து வெளியே வர முடியும். வர முடியாது என்று சட்டம் ஏதும் இல்லை. அப்படி டிட்டாச்சடாக இருந்து அரசியல் செய்யும் ஆற்றல் விசிக-விற்கு இருக்கிறது” என்றார்.
இதையும் படிக்க : அதிமுக தேர்தல் தோல்வி, கட்சித் தாவல் நெருக்கடி.. ‘ஜெயலலிதா பாணியில்’ இபிஎஸ் ஆலோசனைக் கூட்டம்!
தவெக – விசிக கூட்டணி இன்னும் அமையவில்லை:
அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் கூட்டணி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், “இன்னும் தமிழக வெற்றிக் கழகமும் (தவெக), விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் (விசிக) அதிகாரப்பூர்வமாக எந்தக் கூட்டணியையும் உருவாக்கிக் கொள்ளவில்லை என்பதை முதலில் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும், இதுதான் தற்போதைய உண்மை” என்று கூறி அரசியலில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.