கள்ளக்குறிச்சியை உலுக்கிய மெகா கொள்ளை.. ரூ.1 கோடி நகைகளுடன் எஸ்கேப் ஆன மர்ம கும்பல்.. போலீஸ் வலைவீச்சு!
Kallakurichi Jewelry Looted : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே உள்ள நகை அடகு கடையின் பூட்டை உடைத்து ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகை, பணம், வெள்ளி பொருள்கள் ஆகியவற்றை மர்ம நபர் கொள்ளை அடித்து சென்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியை சேர்ந்தவர் கோபால் மகன் ராமச்சந்திரன். இவர், தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் 2 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், ராமச்சந்திரன் வழக்கம் போல நேற்று இரவு பணி முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர், இன்று சனிக்கிழமை காலை கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரன் கடையின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, கடையின் உள்ளே வைக்கப்பட்டிருந்த பொருள்கள் சிதறி கிடந்தன. மேலும், அங்கிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 70 பவுன் தங்க நகைகள், 15 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.55 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 1 கோடி என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக, தியாகதுருகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
மேலும் படிக்க: கோயில் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையையே வசூலிக்க வேண்டும்: அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு
கை ரேகை நிபுணர்கள் தடயம் சேகரிப்பு
அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், துணை காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையிலான போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும், அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கடையில் உள்ளே கண்காணிப்பு கேமரா இல்லாததால் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைந்து கண்டறிவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.




திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
இது தொடர்பாக அக்கம் பக்கத்தில் கடை வைத்துள்ளவர்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக, நகை அடகு கடையின் உரிமையாளர் ராமச்சந்திரன் தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தியாகதுருகம் நகரின் மையப் பகுதியில் உள்ள நகை அடகு கடையில் நிகழ்ந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.