ரூ.2 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு கை நீட்டிய வயர்மேன்.. கம்பி எண்ண வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை.. தென்காசியில் அதிரடி நடவடிக்கை!
Tenkasi Wireman Arrested : தென்காசியில் புதிய மின் இணைப்பு வழங்கவதற்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வயர்மேனை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பால சுதர் தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், புன்னையாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் ( 37 வயது). இவர், பில்டிங் காண்ட்ராக்டர் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் தென்காசி மேட்டு தெருவை சேர்ந்த நாகராஜன் என்பவரின் புதிய வீட்டுக்கு மின் இணைப்பு பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தார். இதற்கு ஆன்லைன் வழியாக ரூ.13,725 மற்றும் ரூ.27,660 என இரு தவணைகளாக கட்டணம் செலுத்தி இருந்தார். இதைத் தொடர்ந்து, மின்வாரிய ஊழியர்கள் அவரது வீட்டுக்கு மின் கம்பம் நடும் பணி உள்ளிட்டவற்றை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, மின் மீட்டர் பொருத்துவதற்காக தென்காசி மின்வாரிய அலுவலக வயர் மேன் ஆறுமுகசாமி ( 53 வயது) ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இந்த பணம் கொடுத்தால்தான் மின் மீட்டர் பொருத்துவேன் என்று வயர் மேன் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.
புதிய மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம்
இதற்கு சண்முகசுந்தரம் தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனை ஏற்காத ஆறுமுகசாமி கண்டிப்பாக பணம் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பின்னர், தான் மின் மீட்டரை பொருத்துவதாகவும், அதன் பின்னர் நான் கேட்ட தொகையை தர வேண்டும் என்று வயர் மேன் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார். அதன்படி, மின் மீட்டரையும் வயர் மேன் பொருத்தியுள்ளார். இதற்கான லஞ்ச பணத்தை சண்முகசுந்தரம் கொடுக்க மறுத்துவிட்டார். இதில், லஞ்சம் கொடுக்க விரும்பாத சண்முகசுந்தரம் தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் படிக்க: அம்மனாக திரிஷா – கோவில் திருவிழா பேனரால் சர்ச்சை – 2 பேர் மீது வழக்குப்பதிவு




வயர்மேன் சுற்றி வளைத்து கைது
அந்த புகாரின் பேரில், போலீசார் ரசாயன பொடி தடவிய ரூ. 2 ஆயிரத்தை சண்முகசுந்தரத்திடம் வழங்கி அதனை வயர் மேன் ஆறுமுகசாமியிடம் கொடுக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி, தென்காசியில் வைத்து வயர் மேன் ஆறுமுகச்சாமியிடம் ரூ.2 ஆயிரம் லஞ்ச பணத்தை சண்முகசுந்தரம் வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பாலசுதர் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு
இதை தொடர்ந்து, அவரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், புதிய மின் இணைப்புக்காக ரூ.2000 லஞ்சம் வாங்கிய வயர் மேன் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சென்னையில் எப்போது மழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?