திமுகவில் பெரும் அதிர்ச்சி.. எம்எல்ஏ மார்க்கண்டேயன் சிறையில் அடைப்பு? ஆகஸ்ட் 3 வரை நீதிமன்ற காவல்!
DMK MLA Markandeyan Judicial Custody: தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை மிரட்டும் வகையில் பேசியதாக திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்த போலீசார் அவரை ஆகஸ்ட் 3- ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க தூத்துக்குடியில் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ மார்க்கண்டேயன் பங்கேற்று பேசியிருந்தார். அப்போது, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து எலும்பை உடைப்பேன் என்று சர்ச்சைக்குரிய வகையில் ஆவேசமாக கருத்துக்களை முன் வைத்திருந்தார். இது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், இன்று திங்கள்கிழமை ( ஜூலை 20- ஆம் தேதி) எம்எல்ஏ மார்க்கண்டேயனை அவரது வீட்டில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதை தொடர்ந்து, அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து சுமார் 10 மணி நேரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ஆகஸ்ட் 3- ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
இதை தொடர்ந்து, அவரை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதியின் சுமதி எம்எல்ஏ மார்க்கண்டேயனை வருகிற ஆகஸ்ட் 3- ஆம் தேதி ( திங்கள்கிழமை) வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, மார்க்கண்டேயன் எம்எல்ஏ தூத்துக்குடி சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனிடையே, மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஜாமீன் கோரிய வழக்கு விசாரணை நாளை மறுநாள் ஜூலை 22- ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
மேலும் படிக்க: அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த முதல்வர்.. இயற்கை எரிவாயு நிறுவனத்தில் விஜய் திடீர் விசிட்!




துப்பாக்கி முனையில் மிரட்டுவதாக பகீர் புகார்
முன்னதாக 10 மணி நேர விசாரணைக்கு பின்னர் மார்க்கண்டேயன் எம். எல். ஏ.வை போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது, அங்கிருந்த செய்தியாளர்களிடம் போலீசார் தன்னை துப்பாக்கி முனையில் மிரட்டுவதாக கூறி சத்தமிட்டார். உடனே, அவரை போலீசார் வேக வேகமாக மருத்துவமனை அறைக்குள் அழைத்து சென்றனர். இதைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர், மீண்டும் அவரை மருத்துவமனையில் இருந்து காவல் வாகனத்திற்கு அழைத்து சென்றனர். அப்போதும், போலீசார் குறித்து குற்றச்சாட்டுகளை வைத்து கூச்சலிட்டார்.
போலீசாரால் கைது செய்யப்பட்ட 2- ஆவது எம்எல்ஏ
இதை தொடர்ந்து, தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நீதிமன்ற காவல் விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதே போல, முதல்வர் விஜய்யை விமர்சித்ததாக திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் அதிரடியாக கைது செய்திருந்தனர். அவரை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவருக்கு முன் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சாமி கும்பிட்டுவிட்டு வீடு திரும்பிய பக்தர்கள்… வழியிலேயே காத்திருந்த விபத்து.. ராசிபுரத்தில் சோகம்!