போலீசார் துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர்.. கைதான திமுக எம்எல்ஏ பகீர் குற்றச்சாட்டு!
DMK MLA Markandan : தன்னை போலீசார் துப்பாக்கி முனைையில் மிரட்டுவதாக கைதான திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த மார்க்கண்டேயன் எம்எல்ஏ குற்றம் சாட்டினார். உடனே, அவரை போலீசார் அழைத்து சென்றனர். அவர் என்ன கூறினார் என்பதை விரிவாக பார்க்கலாம் .
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாக பேசியதாக தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜி.வி. மார்க்கண்டேயனை போலீசார் அவரது இல்லத்தில் வைத்து இன்று காலை அதிரடியாக கைது செய்தனர். அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சுமார் 10 மணி நேரத்துக்கு மேலாக தீவிர விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அப்போது, மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் வாகனத்தில் இருந்து மார்க்கண்டேயன் எம். எல். ஏ. இறங்கி நடந்து சென்ற போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் தன்னை போலீசார் துப்பாக்கி முனையில் மிரட்டுவதாக கத்தி கூச்சலிட்டவாறு தெரிவித்தார்.
எம்எல்ஏவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை
உடனே, அவரை போலீசார் சூழ்ந்து கொண்டு மருத்துவ பரிசோதனை அறைக்குள் வேகமாக அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் சில நிமிடங்கள் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது. இதைத் தொடர்ந்து, அங்கு மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்து சென்றனர். கோவில்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மேலும் படிக்க: அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த முதல்வர்.. இயற்கை எரிவாயு நிறுவனத்தில் விஜய் திடீர் விசிட்!




முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு
இதில், விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் பங்கேற்று பேசினார். அப்போது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஆக்ரோஷமாக பேசியிருந்தார். இதில், திமுகவினர் எலும்புகளை உடைத்து விடுவர் என்ற கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து எம்எல்ஏ மார்க்கண்டேயனை கைது செய்தனர்.
திமுக எம்எல்ஏவை கைது செய்த போலீசார்
அவரை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்ல முயன்ற போது, காவல்துறை வாகனத்தின் முன்னால் அவரது ஆதரவாளர்களும், திமுகவினரும் தரையில் அமர்ந்தும், படுத்த வாரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்எல்ஏ கைதுக்கு திமுகவை சேர்ந்தவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதே போல, கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் விஜயை விமர்சித்து பேசியதாக தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் அவர்கள் தொகுதியில் வைத்து கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ரூ. 5,000 லஞ்சத்தை திரும்ப வாங்கிக்குங்க சார்!.. கதறிய ஏட்டு.. சிக்கிய எஸ்.ஐ.. பொள்ளாச்சியில் சம்பவம்!