அநாகரிகமாக பேசும் திமுகவினரை மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்… தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!
VCK Leader Thol Thirumavalavan Latest Pressmeet : தமிழகத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அநாகரிகமாக பேசி வரும் திமுகவினரை கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
தமிழகத்தில் அநாகரிகமாக பேசி வரும் திமுகவினரை கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்றார் விசிக தலைவர் தொல். திருமாவளவன். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நடைபெற உள்ள இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டி என்று அறிவித்திருந்தாலும் தமிழக வெற்றிக்கழக ஆட்சி தொடர ஆதரவு நீடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இடதுசாரி கட்சிகள் எடுத்துள்ள முடிவுகள் அவர்களின் அரசியல் உரிமை ஆகும். இடதுசாரிகள் இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட போவது கிடையாது. இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரச்சாரம் மேற்கொள்ளும்.
முதல்வர்- அமைச்சர் குறித்து அநாகரிக பேச்சு
திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் சிலர் முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் மின்சார துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் ஆகியோர் குறித்து அநாகரிகமாக பேசி உள்ளனர். பெற்றெடுத்த தாயை பழிக்கும் இது போன்ற இழி சொற்களால் அரசியல் எதிரிகளை விமர்சிப்பது அழகல்ல. மின்சார துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமாரின் தாயே பழிக்கும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்பி ஆ. ராஜா பேசி உள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. பக்குவப்படுத்தப்பட்ட இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் கொச்சையாக பேசுவது கவலை அளிக்கிறது.
மேலும் படிக்க: மத்திய பிரதேசத்துக்கு பாய்ந்த தமிழ்நாடு தனிப்படை.. தப்பிய திருடனை தூக்கிய தூத்துக்குடி போலீஸ்.. 40 பவுன் நகை திருட்டில் அதிரடி!




திமுகவினரை மு. க. ஸ்டாலின் கண்டிக்கனும்
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சிலர் இதுபோன்று அநாகரிகமாக பேசுவது தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக இருக்கும் என்பதை விட, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக மக்களிடத்தில் கருத்து பதிவாகும். இதனை திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க. ஸ்டாலினுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அநாகரிகமாக பேசும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிலரை வெளிப்படையாக, பொதுமக்கள் அறியும் வகையில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் ஆகும்.
முதல்வர் விஜய் மீதான அநாகரிக விமர்சனத்தின் பின்னணி
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் மு.க. ஸ்டாலின், மிசா சட்டம், சர்க்காரியா கமிஷன், திமுக ஆட்சியில் நிகழ்ந்த ஊழல் ஆகியவை குறித்து முதல்வர் ஜோசப் விஜய் கடுமையாக பேசி இருந்தார். இந்த பேச்சை கண்டித்து திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி. கே. சேகர்பாபு, எம்பி ஆ. ராஜா ஆகியோர் முதல்வர் விஜய் உள்ளிட்டோரை கடுமையாக கடுமையாக விமர்சித்து பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஆபாச பேச்சு தான் DMK-வின் DNA.. மு.க.ஸ்டாலின் & உதயநிதியை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் ரமேஷ்!