“கொளத்தூர் முன்னாள் MLA வளர்த்த லட்சணம் இதுதான்!”.. சேகர் பாபு பேச்சை சுட்டிக்காட்டி அமைச்சர் ரமேஷ் விளாசல்!!
Minister Ramesh Criticizes DMK: திமுகவின் அரசியல் கீழ்த்தரமான அவதூறுகளாலும் நாகரிகமற்ற பேச்சுகளாலும் நிறைந்துள்ளது என்று தமிழக வெற்றிக் கழக அமைச்சர் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவின் சமீபத்திய மேடைப் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த அவர், அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஒருவர் மேடையில் பயன்படுத்திய வார்த்தைகள் அரசியல் நாகரிகத்திற்கு எதிரானது எனக் கண்டனம் தெரிவித்தார்.
செப்டம்பர், 13: தமிழ்நாடு அரசியலில் அரசியல் நாகரிகமும் மேடைப் பேச்சுகளின் தரமும் நாளுக்கு நாள் குறைந்து வருவது குறித்து தொடர்ச்சியான விவாதங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பொதுமேடைகளில் பயன்படுத்தும் வார்த்தைகள் குறித்து பிற அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆளும் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்தும், முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர் பாபுவின் சமீபத்திய மேடைப் பேச்சு குறித்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் ரமேஷ் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தனது கடுமையான கண்டனங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.
இதையும் படிக்க: திமுக அடிபட்ட புலியாக களத்தில் இருக்கிறது.. வட்டியும், முதலுமாக திருப்பி கொடுப்போம்.. பி.கே.சேகர் பாபு ஆவேசம்!
கீழ்தரமாக பேசுவதே திமுகவின் அரசியல்:
திமுகவின் தற்போதைய அரசியல் கலாச்சாரம் குறித்து பேசிய அமைச்சர் ரமேஷ், இன்றைக்கு பள்ளி சிறுவர்களிடம் கேட்டால் கூட திமுகவின் அரசியல் என்னவென்று மிகத் தெளிவாகக் கூறிவிடுவார்கள் என்று சாடினார். ஆபாசமாகவும், அவதூறாகவும், கீழ்த்தரமாகவும் பேசுவது மட்டும்தான் திமுகவின் அரசியலாக உருவெடுத்துள்ளது என்றும், கருத்தியல் ரீதியாக பேசுவதற்கோ விவாதிப்பதற்கோ அந்த கட்சியில் தகுதியான ஆட்களே இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், பேரறிஞர் அண்ணா அவர்கள் போற்றி வளர்த்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கைகளில் ஒன்றைக் கூடப் பின்பற்றாத நிலைக்கு இன்றைக்கு திமுக தள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
அரசியல் நாகரிகத்திற்கு எதிரானது:
முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவின் பேச்சை சுட்டிக்காட்டிய அவர், இந்து சமய அறநிலையத்துறையை நிர்வகித்த ஒரு முன்னாள் அமைச்சர், ஆன்மீக ஸ்தலங்களை வழிநடத்திய ஒருவர் பொதுமேடையில் மிகக் கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசுவது அதிர்ச்சியளிக்கிறது என்றார். சேகர் பாபு மேடையில் பேசிய தரமற்ற வார்த்தைகளை அவருடைய வீட்டில் உள்ள பெண்களோ அல்லது பேரக்குழந்தைகளோ உட்கார்ந்து கேட்க முடியுமா என்றும், இத்தகைய கீழ்த்தரமான பேச்சுகள் அரசியல் நாகரிகத்திற்கு முற்றிலும் எதிரானது என்றும் அவர் கேள்வியெழுப்பினார். திமுகவில் அரசியல் நாகரிகம் என்பது முற்றிலும் அழிந்துபோய்விட்டதாக அவர் சாடினார்.
இதையும் படிக்க: தவெக அரசின் 4 மாத ஆட்சி சாதனை அல்ல… பெரும் வேதனை… திராவிட கழக வீரமணி கடும் தாக்கு!
முதல்வர் எங்களுக்குக் கற்றுத்தரவில்லை:
மேலும், தங்களது முதல்வரின் வழிகாட்டுதல் குறித்துப் பேசிய ரமேஷ், எதிராளிகளை நோக்கி எல்லை மீறி கீழ்த்தரமாகப் பேசுவதை தங்களது முதலமைச்சர் தங்களுக்குக் கற்றுத்தரவில்லை என்றும், கண்ணியமாகவும் நேர்மையாகவும் பேசவே தங்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். அதே சமயம் திமுக நிர்வாகிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலான வார்த்தைப் பிரயோகங்கள் தங்களுக்கும் தெரியும் என்றும், ஆனால் பண்பட்ட அரசியலையே தாங்கள் முன்னெடுப்பதாகவும் கூறினார். முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தனது கட்சியினரையும், அமைச்சர்களையும் எப்படி வளர்த்தெடுத்து பயிற்சி கொடுத்துள்ளார் என்பதற்கு சேகர் பாபுவின் இந்த பேச்சே சாட்சி என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
