தவெக அரசின் 4 மாத ஆட்சி சாதனை அல்ல… பெரும் வேதனை… திராவிட கழக வீரமணி கடும் தாக்கு!
K Veeramani Criticized TVK Govt : தமிழக வெற்றிக் கழக அரசின் 4 மாத ஆட்சி காலம் சாதனை கிடையாது. பெரும் வேதனை என்று திராவிட கழகத்தின் தலைவர் கி . வீரமணி கடுமையாக விமர்சித்து உள்ளார். அதை விரிவாக பார்க்கலாம்.
தமிழக வெற்றிக்கழக அரசின் 4 மாத ஆட்சி குறித்து திராவிட கழகத்தின் தலைவர் வீரமணி கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அவசியமற்றதாக திணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள் கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக தவெக அரசு பெரும்பான்மைக்கு ஆதரவளித்து அந்த கட்சியில் இணைந்துள்ளனர். தமிழகத்தில் முன்பு இல்லாதது போல தற்போது விசித்திரமான குதிரை பேரம் நடைபெற்றுள்ளது. எம்எல்ஏ பதவிகளில் இருந்து விலகியவர்கள் தலைமைச் செயலகத்திலேயே அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்துள்ளனர். தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்காக செலவழிக்கப்படும் தொகை மக்களின் வரிப்பணம் ஆகும்.
தவெக ஆட்சியை அளவிட இடைத்தேர்தல் ஒரு வாய்ப்பு
இதை வீணடிப்பதற்கு யார் உரிமை தந்தது. இந்த தேர்தலை திணித்து மக்கள் பணத்தை வீணடிக்க காரணம் யார் என்பதை மக்கள் அறிய மாட்டார்களா. தற்போதைய ஆட்சி காண பெரும்பான்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த இடைத்தேர்தல் வெற்றி தோல்வி ஆட்சியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது என்ற நிலையில், இடைத்தேர்தலில் முக்கியத்துவம் என்ன உள்ளது என்பதை சிந்தித்துப் பார்த்து அதற்கு ஏற்றவாறு மக்கள் வாக்களிக்க வேண்டியது அவசியமாகும். கடந்த 120 நாட்களாக தமிழகத்தில் நடைபெற்று வரும் தவெக ஆட்சியின் செயல்பாடுகளை அளவிடுவதற்கு இந்த இடைத்தேர்தல் தான் வாய்ப்பு.
மேலும் படிக்க: தமிழகத்தில் 46 டிஎஸ்பிக்கள் அதிரடி பணியிட மாற்றம்.. டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு!




தவெக அரசின் 4 மாத ஆட்சியை எடை போட்டால்
பொதுவாக இடைத்தேர்தல் என்பது அரசை எடை போட்டு பார்க்கும் தேர்தல் ஆகும். அப்படி எடை போட்டு பார்க்கும்போது, தவெகவின் 4 மாத ஆட்சியில் யாரும் இதுவரை அறிந்திராத குதிரை பேரங்கள், கட்சி தாவல்கள், அரசியல் மாண்பை கேலிக்கு உள்ளாக்கும் நிகழ்வுகள் உள்ளிட்டவை நிகழ்ந்துள்ளன. மக்களின் முடிவுகளுக்கு எதிராக கட்சி மாறிய வேட்பாளர்களை தற்போது மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து வரும் நிலையில் கொலைகளும், கூலி படைகளும், பாலியல் வன்கொடுமைகளும், ஆணவ படுகொலைகளும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளன.
தவெக அரசின் 4 மாத ஆட்சி சாதனை அல்ல.. வேதனை
தமிழகத்தை ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்காமல் மக்களை பாதுகாத்து வந்தது கடந்த திமுக ஆட்சி. தற்போதைய தவெக அரசு 100 நாள் திட்ட பெயர் மாற்றத்தை ஆதரித்து பாஜக அரசு கொண்டு வந்த திட்டத்தை ஏற்று கையொப்பமிட்டுள்ளது. மொத்தத்தில் தவெக அரசின் 4 மாத ஆட்சி சாதனை அல்ல… வேதனை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: என் தலைவரை ( மு.க.ஸ்டாலினை) தொட்டவரை விடமாட்டோம்.. திமுக போராட்டத்தில் மேயர் ஆர். பிரியா ஆவேசம்!