திண்டுக்கல்லில் சோகம்.. பைக் மீது மோதிய கார்.. நாளை திருமணம் நடக்க இருந்த பெண் பலி.. அவசர சிகிச்சையில் ராணுவ வீரர்!
Dindigul Accident Women Dies : திண்டுக்கல் மாவட்டத்தில் வருங்கால கணவருடன் பைக்கில் சென்ற போது கார் மோதியதில் நாளை திருமணம் நடைபெற இருந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர் .
திண்டுக்கல் மாவட்டம், வெள்ளோடு பகுதியை சேர்ந்தவர் ஜெப பாஸ்டின் ( 29 வயது). இவர், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம், கமலாபுரம் சக்கையா நாயக்கனூர் பகுதியை சேர்ந்த மானுவேல் மகள் மரிய வெல்சியா ( 26 வயது) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இவர்களது திருமணம் நாளை ஞாயிற்றுக்கிழமை ( ஆகஸ்ட் 13- ஆம் தேதி) நடைபெற இருந்தது. இந்த நிலையில், இன்று சனிக்கிழமை காலை மதுரையில் நடைபெற்ற செவிலியர் தேர்வில் பங்கேற்பதற்காக மணமகள் வெல்சியாவை, மணமகன் ஜெப பாஸ்டின் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார். இவர்களது பைக் அதிகாலை 3 மணி அளவில் திண்டுக்கல்- மதுரை தேசிய 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.
பைக் மீது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இருவர்
அப்போது, வாடிப்பட்டி அருகே உள்ள சாணம்பட்டி பிரிவு அருகே இவர்களது பைக் சென்ற போது, அந்த வழியாக கோயம்புத்தூரில் இருந்து மதுரைக்கு சென்ற காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்து சிதறியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி ஜெப பாஸ்டின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் ஜெப பாஸ்டின் மற்றும் மரிய வெல்சியா தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
மேலும் படிக்க: செங்கல்பட்டில் 14-ஆவது மாடியிலிருந்து குதித்த மருத்துவ மாணவர்.. நொடியில் பிரிந்த உயர்.. இதற்காகவா இந்த விபரீத முடிவு!
பெண் உயிரிழப்பு- ராணுவ வீரருக்கு தீவிர சிகிச்சை
இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வாடிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று இருவரையும் மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ஆம்புலன்ஸ் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மரிய வெல்சியா உயிரிழந்தார். ஜெப பாஸ்டின் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வாடிப்பட்டி போலீசார் தீவிர விசாரணை
இந்த சம்பவம் குறித்து மரிய வெல்சியாவின் குடும்பத்தினர் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுனர் இடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்னதாக, இந்த விபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்ட தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அவர்களது குடும்பத்தினர் மருத்துவமனையில் குவிந்து வெல்சியாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
மேலும் படிக்க: காதலி பேச மறுத்ததால் சோகம்.. கன்னியாகுமரியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. போலீசார் விசாரணை!