செங்கல்பட்டில் 14-ஆவது மாடியிலிருந்து குதித்த மருத்துவ மாணவர்.. நொடியில் பிரிந்த உயர்.. இதற்காகவா இந்த விபரீத முடிவு!
Chengalpattu Medical Student Self Harm : செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் மருத்துவ கல்லூரியில் முதுநிலை மருத்துவ மாணவர் 14- ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கேளம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர் .
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர் முனகலா சுப்பா ரெட்டி. இவரது மகன் முனகலா நிகில் ரெட்டி ( 27 வயது). இவர், செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு முதுநிலை மருத்துவ படிப்பு பயின்று வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகில் ரெட்டி மருத்துவ தேர்வுகளை எழுதி இருந்தார். இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் அண்மையில் வெளியாகி இருந்த நிலையில், 2 பாடங்களில் நிகில் தோல்வி அடைந்ததாக தெரிகிறது. நன்றாக படித்து தேர்வு எழுதியும் 2 பாடங்களில் தோல்வி அடைந்து விட்டோமே என்று மாணவர் நிகில் ரெட்டி மிகவும் மன உளைச்சல் அடைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தனது நண்பர்களிடமும் கூறி மன வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
14- ஆவது மாடியில் இருந்து குதித்த மருத்துவ மாணவர்
அதற்கு, அவரது நண்பர்களும் ஆறுதல் தெரிவித்துள்ளனர். அத்துடன், உன்னை போல 8 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இதனால் கவலைப்படாமல் நன்றாக படித்து எதிர்வரும் தேர்வில் வெற்றி பெற்று விடலாம் என்று ஆறுதல் கூறி அவரை தேற்றி உள்ளனர். தொடர்ந்து, அனைவரும் அவரவர்கள் அறையில் தூங்க சென்றுள்ளனர். இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை சுமார் 7 மணி அளவில் நிகில் ரெட்டி தான் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 14- ஆவது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
மேலும் படிக்க: மாற்று சமுதாய இளைஞரை திருமணம் செய்த மகள்.. வீடு புகுந்து அரிவாளால் வெட்டித் தள்ளிய தந்தை.. தென்காசியில் கொடூரம்!




கேளம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை
இதில், தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காயமடைந்த நிகல் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே, அவரை சக மாணவர்கள் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, மாணவரின் சடலம் பிரேத பரிசோதனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மருத்துவ மாணவர் தற்கொலையில் வேறு காரணம் உள்ளதா
அங்கு, மாணவர் நிகில் ரெட்டியின் நண்பர்கள், சக மாணவர்கள் ஆகியோரிடம் போலீசார் தனித்தனியாக விசாரித்தனர். தொடர்ந்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் . . .
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)
மேலும் படிக்க: தென்காசி டிஎஸ்பி பால்சுதரின் கெமிக்கல் ஆப்பு! நிலத்தை அளக்க லஞ்சம் கேட்ட சர்வேயர் உள்பட இருவர்.. தூண்டில் போட்டு தூக்கிய DVAC போலீஸ்!