“சட்டமன்றமா? சினிமா தியேட்டரா?”.. தவெக அரசை வெளுத்து வாங்கிய சீமான்!
Seeman Slams TVK Govt: தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினத்தில் பரமக்குடியில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசு மற்றும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மீது காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சட்டமன்றத்தின் தற்போதைய நிலை மற்றும் நில அபகரிப்பு குறித்து அவர் எழுப்பியுள்ள கேள்விகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ராமநாதபுரம், செப்.11: தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசின் தொழில் கொள்கைகள், நிலப்பறிப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்டமன்றத்தில் நடைபெறும் விவாதங்களின் தரம் குறித்துத் தனது கடுமையான கண்டனங்களையும் கேள்விகளையும் முன்வைத்தார்.
மேலும் படிக்க: இடைத்தேர்தலில் களமிறங்கும் தளபதியின் சிங்கப்பெண்கள்.. மரகதம் குமரவேல்- சத்தியபாமா குறித்த பின்னணி!
நிலங்கள் கையகப்படுத்த எதிர்ப்பு:
அரசு மேற்கொள்ளும் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் தொழிற்பேட்டை திட்டங்கள் குறித்துப் பேசிய சீமான், பரந்தூர் விமான நிலையத் திட்டம் மற்றும் சிப்காட் தொழிற்சாலை அமைக்கும் பணிகளுக்காக விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். “நம் நாட்டின் சொந்த மண்ணிலேயே மக்களை அகதிகளாகவும் அனாசிகளாகவும் மாற்றும் போக்கு தொடர்கிறது. சிப்காட் தொழிற்சாலைகளைத் தொடங்குவதால் மட்டுமே வளர்ச்சி வந்துவிடும் என்றால், இன்றும் ஏழை மக்களுக்கு மாதம் ரூ.2500 நிதி உதவி, இலவச அரிசி மற்றும் இலவச சிலிண்டர்கள் வழங்கும் சூழல் ஏன் நிலவுகிறது? தொழில் வளர்ச்சி என்று கூறிக்கொண்டு நிலங்களை நிறுவனங்களுக்குக் தாரை வார்ப்பதால் மக்களுக்கு உண்மையான பயன் கிடைக்கவில்லை” என்று சாடினார்.
சினிமா தியேட்டராக மாறிய சட்டமன்றம்:
தொடர்ந்து சட்டமன்றத்தின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், தமிழக சட்டமன்றத்தின் பாரம்பரியத்தை நினைவுகூர்ந்தார். பெருந்தலைவர் காமராஜர், கக்கன், இரட்டைமலை சீனிவாசன், ஜீவானந்தம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் போன்ற பெரும் சான்றோர்களும் தலைவர்களும் அமர்ந்து மக்கள் நலன் சார்ந்த விவாதங்களை நடத்திய புனிதமான அவை அது என்றும், ஆனால் தற்போது அந்த அவை ஒரு ‘சினிமா தியேட்டர்’ போல மாற்றப்பட்டு விட்டதாகவும் விமர்சித்தார்.
தலைவர்களை அவமதிக்கும் செயல்:
சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் பேசுவது குறித்துக் குறிப்பிட்ட அவர், “மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைப் பேசாமல், சினிமா படங்களின் பெயர்களையும் திரை வசனங்களையும் பேசி நேரத்தை வீணடிக்கிறார்கள். ‘துள்ளாத மனமும் துள்ளுது’, ‘மெர்சல்’, ‘பைரவா’, ‘குருவி’ போன்ற திரைப்படங்களின் பெயர்களைக் கூறி பாலாபிஷேகம் செய்தது வரை அவையில் பேசுகின்றனர். சிலர் தனது குடும்பத்தினரின் பெயர்களைப் பட்டியலிட்டு நன்றி தெரிவிப்பதற்கே அவையைப் பயன்படுத்துகின்றனர். இது போன்ற செயல்கள் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளையும் தலைவர்களையும் அவமதிக்கும் செயலாகும்” என்று ஆதங்கத்துடன் கூறினார்.
மேலும் படிக்க: 2 தொகுதி இடைத்தேர்தல்.. திமுக-அதிமுக-தவெக மும்முனை போட்டி.. யார் வசம் செல்கிறது மதுராந்தகம்- தாராபுரம்!
சுதந்திரத்தைப் பாதுகாப்பதே பெரும் சவால்:
தொழில் வளர்ச்சியால் ஏற்படும் நில மற்றும் நீர் நிலைப் பாதிப்புகள் குறித்து மேலும் சுட்டிக்காட்டிய சீமான், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் ஏற்பட்ட கழிவுப் பிரச்சினையை முன்னிலைப்படுத்தினார். “26 கி.மீ தொலைவுக்குத் தண்ணீரைக் கொண்டு செல்லும் சிப்காட் திட்டங்களால் நிலத்தடி நீர் நஞ்சாகி, அதில் யுரேனியம் கலந்து குடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகளே கூறுகின்றனர். இதற்கு இந்த ஆட்சியாளர்களிடம் பதில் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பிய அவர், ஒரே ஒரு தனியார் விமான நிறுவனத்தின் ஏகபோக லாபத்திற்காக 5000 ஏக்கர் விளைநிலங்களை அழித்துப் புதிய விமான நிலையம் கட்டுவது மக்கள் நலனுக்கு எதிரானது என்றும், இது போன்ற தவறான கொள்கைகளால் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதே பெரும் சவாலாக மாறியுள்ளது என்றும் தெரிவித்தார்.