இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவா? திடீர் நிபந்தனை விதித்த இந்திய கம்யூனிஸ்ட்? என்ன அது!
CPI Laid conditions for Support TVK : தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளிப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திடீர் நிபந்தனை விதித்துள்ளது. அது என்ன என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 6- ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதே நாளில் புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதற்கு முடிவு செய்துள்ள நிலையில், விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு தெரிவித்தால், தமிழகத்தில் நடைபெறும் இரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் நிபந்தனை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விவகாரம், முதல்வர் விஜயின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இடதுசாரி கட்சிகளின் இடைத்தேர்தல் ஆதரவு நிலைப்பாடு
இதில், தமிழக வெற்றி கழக தலைமை எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிற செப்டம்பர் 15- ஆம் தேதிக்குள் முடிவு அறிவிக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் கூறுகையில், தமிழக இடைத்தேர்தல் தொடர்பாக இடதுசாக் கட்சிகள் தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
மேலும் படிக்க: 2 தொகுதி இடைத்தேர்தல்.. திமுக-அதிமுக-தவெக மும்முனை போட்டி.. யார் வசம் செல்கிறது மதுராந்தகம்- தாராபுரம்!




கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கூட்டத்தில் தெளிவான முடிவு
கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நாளை சனிக்கிழமை ( செப்டம்பர் 12- ஆம் தேதி) நடைபெறுகிறது. இதில், இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் முடிவு எடுப்போம் என்று தெரிவித்துள்ளார். இது ஒரு புறம் இருந்தாலும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகமும் காய் நகர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இடைத்தேர்தலில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா, திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பரந்தாமன் மற்றும் சுகன்யா, அதிமுக சார்பில் கணிதா சம்பத் மற்றும் பானுமதி ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் செப்டம்பர் 13- ஆம் தேதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருப்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக தரப்பு பேச்சுவார்த்தை
இதில், தவெகவுக்கு காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அந்த வகையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவையும் சேர்த்து பெறுவதற்கு, தவெக பொதுச்செயலாளர்கள் என். ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் தவெக ஆட்சி கவிழும்.. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சூளுரை!