லண்டனில் முதல்வர் விஜய்.. செப்.17-ல் நடப்பதாக இருந்த ‘காமராஜர் காலை உணவு திட்டம்’ தள்ளிப்போகிறதா?
Kamarajar Breakfast Scheme Expansion: தமிழகத்தில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் வழங்கப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்ய தவெக அரசு முடிவு செய்துள்ளது. காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்க விழா செப்டம்பர் 17 அன்று திட்டமிடப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் காரணமாக விழா தள்ளிப் போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
செப்டம்பர், 12: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் ஏற்கனவே வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தவெக அரசு இத்திட்டத்தை 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது. காமராஜர் பிறந்த ஊரான விருதுநகரில் உள்ள அவர் பயின்ற பள்ளியிலேயே, பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி அன்று இந்த விரிவாக்கத் திட்டத்தைத் தொடங்கி வைக்கப் பள்ளிக்கல்வித் துறை சார்பில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
மேலும் படிக்க: இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவா? திடீர் நிபந்தனை விதித்த இந்திய கம்யூனிஸ்ட்? என்ன அது!
செப்.17ல் சென்னை திரும்பும் முதல்வர்:
இருப்பினும், இத்திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழோ அறிவிப்போ இதுவரை அரசால் வெளியிடப்படாத நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய் தொழில்துறை முதலீடுகளை ஈர்ப்பதற்காகப் லண்டன் சென்றுள்ளார். திட்டமிடப்பட்ட பயண அட்டவணையின்படி முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 17-ஆம் தேதி காலை 8.30 மணி அளவிலேயே லண்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் செப்டம்பர் 17 அன்று விருதுநகரில் திட்டமிட்டபடி காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்க விழா நடைபெறுமா என்பதில் பெரும் கேள்விக்குறி எழுந்துள்ளது.
காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்:
ஏற்கனவே 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 19 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்து வரும் சூழலில், இத்திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்வதன் மூலம் மேலும் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் புதிதாகப் பயனடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக தவெக அரசு கூடுதல் நிதியை ஒதுக்கி, திட்டத்திற்குப் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ எனவும் மறுபெயரிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் 15,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ள நிலையில், இதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மேலும் படிக்க: “கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருக்கணும்!”.. திமுகவை வெளுத்து வாங்கிய திருமாவளவன்!!
வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்படும் திட்டம்:
காலை உணவுத் திட்டம் என்பதால் இதற்கான தொடக்க விழாக்கள் பொதுவாகக் காலை 7.00 மணி முதல் 7.30 மணிக்குள்ளாகவே நடைபெறுவது வழக்கம். ஆனால், முதலமைச்சர் லண்டனில் இருந்து காலை 8.30 மணிக்கே சென்னை வந்தடைவார் என்பதால், அன்றைய தினமே உடனடியாக விருதுநகருக்குச் சென்று காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இதன்காரணமாக, இத்திட்டத்தின் தொடக்க விழா செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெறுமா அல்லது வேறொரு தேதிக்குத் தள்ளி வைக்கப்படுமா என்பது குறித்து இன்னும் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.