“கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருக்கணும்!”.. திமுகவை வெளுத்து வாங்கிய திருமாவளவன்!!
Thirumavalavan Critical Speech On DMK: திமுக தலைமையிலான கூட்டணி உடைந்ததற்குக் திமுகவின் தளர்த்தப்பட்ட மற்றும் இறுக்கமான அணுகுமுறையே முக்கியக் காரணம் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். விஜய் தலைமையிலான புதிய அரசியல் நகர்வுகள், தவெக மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' உருவான பின்னணி குறித்து அவர் பேசியதன் முழு விவாதம்.
தருமபுரி, செப்டம்பர் 12: தமிழக அரசியல் களத்தில் அண்மையில் ஏற்பட்ட கூட்டணிக் மாற்றங்கள் மற்றும் திமுக தலைமையிலான அணியில் இருந்து கூட்டணிக் கட்சிகள் வெளியேறியது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். தருமபுரியில் விசிக தலைமை நிலைய செயலர் தமிழ்ச்செல்வன் இல்ல திருமண விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற அவர் மேடையில் பேசியதாவது, திமுக கூட்டணியில் 100 சதவீதம் விசிக நீடிக்க முடியாமல் போனதற்கு திமுகவின் அணுகுமுறையே முழு முதற்காரணம் என்றும், இதற்குத் திருமாவளவன் பொறுப்பல்ல என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் 70 ஆண்டுகால தோழமைக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வெளியேற்றத்திற்கும், மதிமுக தனது சொந்தச் சின்னத்தில் போட்டியிட ஆசைப்பட்டபோது அதை மறுத்து உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைத்த கசப்பிற்குமே திமுக கையாண்ட இறுக்கமான போக்கே காரணம் என அவர் விமர்சித்துள்ளார்.
மேலும் படிக்க: 2 தொகுதி இடைத்தேர்தல்.. திமுக-அதிமுக-தவெக மும்முனை போட்டி.. யார் வசம் செல்கிறது மதுராந்தகம்- தாராபுரம்!
விஜய் மீது நடவடிக்கை எடுத்திருக்கனும்:
தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தலைவர் விஜய் குறித்துப் பேசிய திருமாவளவன், விஜய்யின் அரசியல் களம் குறித்து திமுக தொடக்கம் முதலே சரியாகக் கணிக்கத் தவறிவிட்டதாகச் சாடினார். குறிப்பாக கரூர் சம்பவத்தின் போது, மக்கள் நெரிசலுக்கும் கூட்டத்திற்கும் காரணமான சூழ்நிலைகளை உருவாக்கிய விஜய் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும், அப்போதே அவருடைய அரசியலை திமுக அம்பலப்படுத்தியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இருப்பினும், தவெக சார்பில் எவ்வித அதிமுக, பாஜக அல்லது பாமக ஆதரவும் கோரப்படாமல், காங்கிரஸ் மற்றும் விசிகவின் ஆதரவை விஜய் நாடியது ஒரு முக்கிய அரசியல் மாற்றமாகக் கருதப்படுவதாகத் தெரிவித்தார்.
புதிய கூட்டணி பெயர் சுவாரஸ்யம்:
மேலும், புதிய கூட்டணி அமைப்பின் போது நடைபெற்ற சுவாரசியமான பின்னணிகளையும் திருமாவளவன் விவரித்தார். முதலமைச்சர் விஜய் கூட்டணிக்குப் பெயர் வைக்கும் நிகழ்வின் போது, அக்கூட்டணிக்கு ‘சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ எனப் பெயரிட முன்மொழிந்தார். அப்போது தான் குறுக்கிட்டு, “இன்றைய சூழலில் பாஜகவும் சாதியவாதிகளும் கூட சமூகநீதி என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். எனவே, இதில் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல் இடம்பெற வேண்டும். ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ எனப் பெயரிட்டால் மட்டுமே நாம் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் கொள்கைகளுக்கு எதிரானவர்கள் என்பது தெளிவாக வெளிப்படும்” என்று வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். திருமாவளவனின் இந்தக் கோரிக்கையை விஜய் உடனடியாக ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.
மேலும் படிக்க: இடைத்தேர்தலில் களமிறங்கும் தளபதியின் சிங்கப்பெண்கள்.. மரகதம் குமரவேல்- சத்தியபாமா குறித்த பின்னணி!
தனிமைப்படுத்த முயன்ற திமுக:
குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், மாநிலத்தில் பாஜகவின் மறைமுக ஆதிக்கம் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே மதச்சார்பற்ற சக்திகளான காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுடன் இணைந்து விஜய்யின் தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் நிலையை விசிக எடுத்ததாக திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். திமுக தங்களை தனிமைப்படுத்த முயன்ற போதிலும், மாநிலத்தில் ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாக்கவே இந்த அரசியல் முடிவை எடுத்ததாகக் கூறினார்.