இடைத்தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் திமுக.. மதுராந்தகம், தாராபுரத்திற்கு பொறுப்பாளர்கள் நியமனம்!!
Assembly By-Election 2026: மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்கறிஞர் ஐ.பரந்தாமன் மற்றும் எஸ்.சுகன்யா ஆகியோர் வேட்பாளர்களாகக் களம் இறக்கப்பட்டுள்ள நிலையில், மனுத்தாக்கல் முதல் பிரச்சார வியூகங்கள் வரை ஒருங்கிணைக்க மூத்த தலைவர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் களைகட்டத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே இத்தொகுதிகளில் திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்ட நிலையில், தேர்தல் பணிகளை முடுக்கிவிடும் வகையில் திமுக தலைமை முக்கிய நகர்வை மேற்கொண்டுள்ளது. இதன்படி, இரு தொகுதிகளுக்கும் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்களைத் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க: “எங்கே சென்றது சிங்கப்பெண் படை?”.. ஒரே நாளில் அடுத்தடுத்த பாலியல் குற்றங்கள்.. வானதி சீனிவாசன் சரமாரி கேள்வி!
மும்முனைப் போட்டியாக உருவெடுத்த இடைத்தேர்தல் களம்
இடைத்தேர்தல் களம் குறித்துப் பார்க்கையில், மதுராந்தகம் (தனி) தொகுதியில் திமுக சார்பில் சட்டத்துறை துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஐ. பரந்தாமன் போட்டியிடுகிறார். அதேபோல், தாராபுரம் (தனி) தொகுதியில் திமுக மகளிர் அணியைச் சேர்ந்த எஸ். சுகன்யா வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ளார். இத்தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால் இந்த இடைத்தேர்தல் சூழல் உருவாகியுள்ளது. தற்போது திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய மூன்று பிரதான கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளதால், இரு தொகுதிகளிலும் மும்முனைப் போட்டி நிலவி தேர்தல் களம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்
இதன் தொடர்ச்சியாக, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பணிகளைக் கவனிப்பதற்காகத் தமிழக முன்னாள் அமைச்சர் தா.மு. அன்பரசன் மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக முன்னாள் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் இல. பத்மநாபன் ஆகிய இருவரையும் திமுக தலைமை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளது.
மேலும் படிக்க: பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகம்.. எதிர்க்கும் அரசியல் தலைவர்கள்.. பின்னணி என்ன?
வேட்புமனுத் தாக்கல் மற்றும் பிரச்சாரத் திட்டங்கள்;
நியமிக்கப்பட்டுள்ள இந்தத் தேர்தல் பொறுப்பாளர்கள், தொகுதிகளில் வாக்கு சேகரிக்கும் பணிகள், பூத் கமிட்டி கூட்டங்களை ஒருங்கிணைப்பது மற்றும் முதன்மைத் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரத் திட்டங்களை வகுப்பது போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். இதனிடையே, இரு தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வரும் 15-ஆம் தேதி தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து, திமுகவின் முக்கியத் தலைவர்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதால் இடைத்தேர்தல் களம் தற்போதே சூடபிடித்துள்ளது.