மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: கட்டிட மேற்கூரைகளில் ஏற பொதுமக்களுக்கு தடை!
Meenakshi Temple Kumbabhishekam: கும்பாபிஷேகம் நடைபெறும் செப்டம்பர் 17ஆம் தேதி பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தங்கள் கட்டிடங்களின் மேற்கூரைகளில் எவரும் ஏறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கட்டிட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக கட்டிட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி தரப்பில் நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 11, 2026: மதுரை மாநகராட்சி மண்டலம் 3-க்குட்பட்ட அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களின் மேற்கூரைகளில் ஏறி கும்பாபிஷேகத்தைப் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகம்.. எதிர்க்கும் அரசியல் தலைவர்கள்.. பின்னணி என்ன?
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா:
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி குடமுழுக்கு பெருவிழா நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு பெருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதால், மதுரை மாநகரமே காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், குடமுழுக்கு விழாவுக்கான தேவையான ஏற்பாடுகளும் கோவில் நிர்வாகம் சார்பில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பக்தர்கள் மேற்கூரை மீது ஏற தடை விதிப்பு:
இந்த சூழலில், கும்பாபிஷேக தினத்தன்று கோவிலைச் சுற்றியுள்ள நான்கு மாசி வீதிகளில் அமைந்துள்ள கட்டிடங்கள் மற்றும் அவற்றின் மேற்கூரைகளில் பொதுமக்கள் ஏறுவதற்கு மதுரை மாநகராட்சி தடை விதித்துள்ளது. கும்பாபிஷேகத்தின்போது ஏற்படக்கூடிய கூட்ட நெரிசல் மற்றும் எதிர்பாராத விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மதுரைக்கு ரூ.4000, நெல்லைக்கு ரூ. 3,500.. பன்மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்.. கடும் அதிருப்தியில் பொதுமக்கள்..
அதிகமான பொதுமக்கள் கட்டிடங்களின் மேற்கூரைகளில் ஏறுவதால், கட்டிடங்களின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டு, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். மேலும், சில கட்டிடங்களின் அருகிலேயே மின்சாரக் கம்பிகள் மற்றும் வடங்கள் செல்வதால், மின்சார விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்:
இதனை கருத்தில் கொண்டு, கும்பாபிஷேகம் நடைபெறும் செப்டம்பர் 17ஆம் தேதி பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தங்கள் கட்டிடங்களின் மேற்கூரைகளில் எவரும் ஏறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கட்டிட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக கட்டிட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி தரப்பில் நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 17ஆம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணி வரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கடந்த 2009ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு 17 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.