மத்திய பிரதேசத்துக்கு பாய்ந்த தமிழ்நாடு தனிப்படை.. தப்பிய திருடனை தூக்கிய தூத்துக்குடி போலீஸ்.. 40 பவுன் நகை திருட்டில் அதிரடி!
Thoothukudi Gold Jewelry Stolen : தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் ஆம்னி பேருந்தில் பயணியிடம் இருந்து 40 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை மத்தியபிரதேசத்தில் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர் .
திருநெல்வேலி மாவட்டம், பொதிகை நகரை சேர்ந்தவர் ஜஸ்டின் ( 56 வயது). இவரது மனைவி ஜுலியட். இவர், தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், தம்பதி இருவரும் கடந்த ஆகஸ்ட் 27- ஆம் தேதி சென்னையில் வசித்து வரும் தனது மகனின் வீட்டுக்கு செல்வதற்காக திருநெல்வேலியில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து மூலமாக சென்னை புறப்பட்டு சென்றனர். அவர்கள், சுமார் 40 பவுன் தங்க நகைகளை தங்களுடன் எடுத்துச் சென்றனர். இந்த பேருந்தானது, தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு சுங்கச்சாவடி அருகே உள்ள கரிசல்குளம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, பயணிகள் அனைவரும் உணவு அருந்துவதற்காக அந்த பகுதியில் உள்ள உணவகத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது.
பேருந்தில் இருந்த 40 பவுன் தங்க நகை திருட்டு
அப்போது, ஜஸ்டின் மற்றும் அவரது மனைவி ஜூலியட் உள்ளிட்ட பயணிகள் உணவு அருந்துவதற்காக பேருந்தில் இருந்து இறங்கி உணவகத்துக்கு சென்றனர். ஜஸ்டின் தனது நகை பையை உடன் எடுத்துச் செல்லாமல் பேருந்தில் தனது இருக்கையின் அருகே வைத்துவிட்டு சென்றுள்ளார். பின்னர், உணவு அருந்திவிட்டு பேருந்துக்குள் வந்தபோது சீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்த நகை பையை காணாமல் திடுக்கிட்டார். பேருந்தில் உள்ளே தேடிப் பார்த்தும் நகை கிடைக்கவில்லை.
மேலும் படிக்க: இலங்கை டூ தமிழகத்துக்கு கடத்தல் முயற்சி.. திமிங்கல வாந்தியுடன் சிக்கிய இருவர்.. ரூ. 7 கோடி கடல் தங்கம் பறிமுதல்!




செல்போன் சிக்னல் மூலம் துப்பு துலங்கியது
இது தொடர்பாக, ஜஸ்டின், ஜூலியட் ஆகியோர் கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அத்துடன், சம்பவம் நடந்த இடத்தில் பதிவான செல்போன் சிக்னல் மூலமாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், நகை திருட்டில் ஈடுபட்டவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
முக்கிய குற்றவாளி கைது- இருவர் தலைமறைவு
அதன்படி, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிவபிரசாத் உத்தரவின் அடிப்படையில் கோவில்பட்டி உதவி காவல் கண்காணிப்பாளர் நீல் சர்மா மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு இன்ஸ்பெக்டர் வானமாமலை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் மத்திய பிரதேச மாநிலத்திற்கு நேரில் சென்று தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். இதில், நகை திருட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான மக்சூத் கான் ( 35 வயது) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 40 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். அவருடன் தொடர்புடைய ரபிக், கடுக்கான் என்ற முகதின் ஆகியோர் தலைமுறைவாகியுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க: கடலூரில் பதற்றமான சூழல்.. அம்பேத்கர் சிலை சேதம்.. போலீசாரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!