17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த புதிய யானை.. விநாயகர் சதுர்த்தியில் சிறப்பு ஏற்பாடு..
Assam Elephants Sent to Tamil Nadu Temples: அசாம் மாநிலத்திலிருந்து தமிழகத்தில் உள்ள 4 முக்கிய திருக்கோவில்களுக்கு 5 யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதில் மதுரையில் உள்ள உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 'துர்கா' என்ற 5 வயது பெண் யானை கொண்டுவரப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உபயதாரர்கள் மூலம் இந்த யானைகள் கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்டன.
செப்டம்பர், 14: தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்கத் திருக்கோவில்களில் வழிபாடுகள், திருவிழாக்கள் மற்றும் சமயச் சடங்குகளில் கோவில்களில் உள்ள யானைகளுக்கு மிக முக்கியமான இடமும் பங்களிப்பும் உண்டு. யானைகளின் ஆசிபெறுவது பக்தர்களுக்குப் பெருமகிழ்ச்சியையும் ஆன்மீக அமைதியையும் அளிக்கும் வழக்கம். கடந்த சில காலமாகப் பல்வேறு கோவில்களில் இருந்த யானைகள் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகப் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய யானைகளைத் திருக்கோவில்களுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் ஆன்மீக ஆர்வலர்களிடையே எழுந்து வந்தது. இந்தச் சூழலில், தமிழகத்தில் உள்ள பிரபல ஆன்மீகத் தலங்களின் பயன்பாட்டிற்காக அசாம் மாநிலத்திலிருந்து யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: “ஆ.ராசாவின் பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது!”.. சிபிஎம் சண்முகம் கொந்தளிப்பு!!
அசாமில் இருந்து புறப்பட்ட யானைகள்:
அசாம் மாநிலத்திலிருந்து தமிழகத்தில் உள்ள 4 முக்கிய ஆன்மீகத் தலங்களுக்காக மொத்தம் 5 யானைகள் வாங்கப்பட்டு வாகனங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி அசாமில் இருந்து புறப்பட்ட இந்த யானைகள் வாகனங்கள் வாயிலாகத் தமிழ்நாட்டை நோக்கிப் பயணமாகின. இந்த யானைகள் உடநலப் பரிசோதனைகள் மற்றும் முறையான அனுமதிகளுடன் தமிழகத்திற்கு நேற்றிரவு கொண்டுவரப்பட்டன.
எந்தெந்த கோவில்களுக்கு எந்த யானை?:
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்: 5 வயதுடைய ‘துர்கா’ என்ற பெண் யானை.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில்: 6 வயதுடைய ‘ராணி’ என்ற ஆண் யானை மற்றும் 8 வயதுடைய ‘சிவா’ என்ற மற்றொரு ஆண் யானை.
நாகப்பட்டினம் வைத்தீஸ்வரன் கோவில்: 13 வயதுடைய ‘ரூப்சிங்’ என்ற யானை,
காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்: 5 வயதுடைய ‘பிஜிலி’ என்ற பெண் யானை.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய யானை:
உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள ‘பார்வதி’ என்ற யானை கடந்த சில வருடங்களாகக் கண்புறை நோயினால் பாதிக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், வருகின்ற 17-ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில், ‘துர்கா’ என்ற 5 வயது பெண் யானை மதுரைக்கு கொண்டுவரப்பட்டது பக்தர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: “மேடை போட்டு ஆபாசமாக பேசுவதுதான் கடைசி ஆயுதமா?”.. மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி கேள்வி!!
விநாயகர் சதுர்த்தி நாளில் கோவில் கொடை:
அசாமில் இருந்து லாரிகள் மூலமாகப் பயணப்பட்டு வந்த ‘துர்கா’ பெண் யானை நேற்றிரவு மதுரையை வந்தடைந்தது. தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு உபயதாரர்கள் மூலமாக இந்த யானை முறையாக மீனாட்சி அம்மன் கோவிலுக்குக் கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இதேபோல திருவண்ணாமலை, வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் காஞ்சிபுரம் காமகோடி பீடத்திற்கும் உரிய முறையில் யானைகள் ஒப்படைக்கப்பட்டுத் திருக்கோவில் சடங்குகளில் ஈடுபடுத்தப்பட்டன.