கடலூரில் பதற்றமான சூழல்.. அம்பேத்கர் சிலை சேதம்.. போலீசாரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!
Cuddalore Ambedkar Statue Damage : கடலூர் மாவட்டத்தில் பொது இடத்தில் இருந்த அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் பகுதியில் ஏஎஸ்பி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால், பரபரப்பான சூழல் நிலவுகிறது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள சி. கொத்தங்குடி பகுதியில் அம்பேத்கர் சிலை அமைந்துள்ளது. இந்த சிலையை யாரும் சேதப்படுத்தாத வகையில் சுற்றிலும் இரும்பு கம்பிகளால் ஆன கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் இரும்பு கூண்டை உடைத்து தூக்கி எறிந்து விட்டு, அம்பேத்கர் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த கண்ணாடி உள்ளிட்ட பகுதிகளை கடுமையாக சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனை, இன்று அதிகாலை அந்த வழியாக சென்ற அந்தப் பகுதியை சேர்ந்த பொது மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில், இது தொடர்பாக சிதம்பரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் சத்திரிய கவின் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரிடம் பொது மக்கள் கடும் வாக்குவாதம்
தொடர்ந்து, அந்த பகுதிகளில் காவல் உதவி கண்காணிப்பாளர் சத்ரியன் சோதனை மேற்கொண்டார். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுவரை அம்பேத்கர் சிலையை சுற்றிலும் கூண்டு அமைக்க விடமாட்டோம் என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களிடம் உதவி கண்காணிப்பாளர் சத்ரிய கவின் தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மேலும் படிக்க: விநாயகர் சதுர்த்தி – நாளை மெட்ரோ ரயில் சேவையில் முக்கிய மாற்றம்




ஏ.எஸ்.பி. தலைமையில் போலீசார் குவிப்பு
இதில், அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதை தொடர்ந்து, அந்த பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை விட்டுவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவமும், போலீசாரிடம் அந்த பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவமும் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சி. கொத்தங்குடி பகுதியில் காவல் உதவி கண்காணிப்பாளர் சத்திரிய கவின் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இரு இளைஞர்களிடம் போலீசார் விசாரணை
இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். இதில், சந்தேகம் அளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 2 பேரின் உருவங்கள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இரு இளைஞர்களை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, இந்த இளைஞர்களை விசாரணைக்கு அழைத்து செல்ல முயன்ற போது அவர்களது உறவினர்கள் போலீசாரை தடுத்து நிறுத்தி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: தவெக கட்சி கொடி வண்ணத்தில் புதிய பேருந்துகள்… சர்ச்சையாகும் புகைப்படங்கள்