போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்திய பெண் மரணம் – 2 பேர் கைது
திருச்சியில் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்திக்கொண்ட இளம் பெண் மரணமடைந்தார். இந்த வழக்கில் அந்த பெண்ணின் ஆண் நண்பர்கள் 2 பேர் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி, ஜூன் 9 : திருச்சியில் வலி நிவாரண மாத்திரைகளை கரைத்து போதைக்காக ஊசியாக செலுத்திய இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய இளம்பெண்ணின் நண்பர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாநகரம் அரியமங்கலத்தை சேர்ந்த இளம் பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த சதாம் உசேன் மற்றும் ஷேக் அப்துல்லா என்பவருடன் கடந்த ஜூன் 7, 2026 அன்று இரவு திருச்சி ரயில் நிலையம் அருகே அறை எடுத்து தங்கியுள்ளனர்.
போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்திய பெண் மரணம்
இந்த நிலையில் ஜூன் 8, 2026 நேற்றும் மதியம் 1 மணியளவில் மூவரும் சேர்ந்து போதைக்காக வலி நிவவாரண மாத்திரைகளை கரைத்து போதைக்காக ஊசியாக போட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் இளம்பெண் திடீரென மயக்கமடைந்தார். அதனைத் தொடர்ந்து சதாம் உசேனும் ஷேக் அப்துல்லாவும் அந்த பெண்ணை ஆட்டோ மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர்.
இதையும் படிக்க : சென்னை ஆவடியில் ஈ.பி பெட்டியிலிருந்து 17 பியூஸ் கேரியர்களை திருடிய நூதன சம்பவம்.. இரண்டு பேர் கைது..




மருத்துவமனையில் இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இதனையடுத்து பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மருத்துவர்கள் அளித்த தகவலின் பெயரில் இளம்பெண் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தினர். அறையில் வலி நிவாரண மாத்திரைகள் 10 அட்டைகள் மற்றும் மருந்து செலுத்துவதற்கான ஊசி ஆகியவை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து மருந்துகளை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இளம் பெண்ணின் தாயாரிடம் விசாரித்த போது அவர் அந்த மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்ததும். அவரிடம் இருந்து இளம் பெண் அந்த மாத்திரைகளை எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சதாம் உசேன் மற்றும் ஷேக் அப்துல்லா ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க : குளிர்சாதன பெட்டியில் தண்ணீர் எடுத்த இளைஞர் பரிதாப பலி.. உயிரை பரித்த குளிர்சாதன பெட்டி!
ஒரு பக்கம் தமிழ்நாட்டில் மாணவர்களிடையே போதை பழக்கம் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி வரும் நிலையில், போதைக்கா இது போன்ற ஆபத்தான வழிகளை நாடும் இளைஞர்களின் செயல் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பள்ளி, கல்லூரிகளின் வழியாக போதைப்பொருளினால் உடல் நல பாதிப்புகள் மற்றும் வாழ்க்கை ஆகியவற்றை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.