நீதிமன்ற வளாகத்திலேயே கொலையா? கோவையில் பிணமாகக் கிடந்த வாலிபர் வழக்கில் அதிரடி திருப்பம்!!
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவை 'கொலை வழக்காக' மாற்றி விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். நீதிமன்ற வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளைப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவை, ஜுன் 07: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் பிணமாகக் கிடந்த வடமாநில வாலிபர், அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது பிரேதப் பரிசோதனை முடிவில் அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம் நீதிமன்ற வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 1-ஆம் தேதி, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார். இது குறித்துத் தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். அப்போது உயிரிழந்த நபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியிருந்தது கண்டறியப்பட்டது.
இதையும் படிக்க: சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்.. பள்ளி மாணவனை மது குடிக்க வைத்து கழுத்தறுத்து கொலை.. வெறிச்செயலில் ஈடுபட்ட இருவருக்கு வலை!
வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்:
இதனைத் தொடர்ந்து, உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த நபர் யார் என்று நடத்திய விசாரணையில், அவர் வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் என்பது மட்டுமே தெரியவந்தது. அவரது முழுமையான விபரங்கள் உடனடியாகக் கிடைக்காததால், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்:
இந்நிலையில், அந்த வாலிபரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியானது. இது குறித்துக் காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது,”நீதிமன்ற வளாகத்தில் பிணமாகக் கிடந்த வாலிபரின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. அதில், அவரது தலையில் கனமான கல்லாலோ அல்லது ஏதேனும் கூர்மையான ஆயுதத்தாலோ பலமாகத் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மர்ம நபர்கள் அவரை அடித்துக் கொலை செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.”
கொலையாளிகளுக்கு வலைவீச்சு:
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவை ‘கொலை வழக்காக’ மாற்றி விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். நீதிமன்ற வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளைப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாகச் சில நபர்கள் மீது போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கே.என்.நேரு மீதான ஊழல் புகார்.. லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு திடீர் தடை.. நீதிமன்றம் உத்தரவு!
சந்தேகத்திற்குரிய அந்த நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினால் மட்டுமே, கொலை செய்யப்பட்ட வடமாநில வாலிபர் யார்? அவர் எதற்காகக் கொலை செய்யப்பட்டார்? கொலையின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? போன்ற முழுமையான விபரங்கள் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.