முதல்வர் விஜய்யை நம்பினால் நிச்சயம் பலன் உண்டு.. அமைச்சர் என். ஆனந்த்!
Tvk General Secretary N Anand : தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை நம்பி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர் களுக்கு நிச்சயம் பலன் உண்டு என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான என். ஆனந்த் தெரிவித்தார் .
சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் விழா இன்று சனிக்கிழமை ( ஆகஸ்ட் 1- ஆம் தேதி) நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான என். ஆனந்த் தலைமை வகித்து பேசியதாவது: தமிழக முதல்வர் விஜய் மீது நம்பிக்கை வைத்து அனைவரும் இங்கு வந்துள்ளீர்கள். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் டெபாசிட் வாங்கிய ஒரே கட்சி தமிழக வெற்றி கழகம் தான். நான் ஒரு சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருக்கிறேன் என்று சொன்னால் அது முதல்வர் விஜய்யால் மட்டுமே சாத்தியமாகும். எனது டி. நகர் தொகுதி மக்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டமன்ற தேர்தலில் வெறும் 4 நாட்கள் மட்டுமே டி. நகர் தொகுதியில் வாக்கு சேகரிக்க சென்றேன். மற்ற நாட்கள் அங்கு செல்லவில்லை. தலைவர் விஜய்யுடன் இருந்தேன்.
ஊழல் செய்தி கட்சி மற்றும் ஆட்சியை நடத்த மாட்டோம்
தலைவர் விஜயின் முகத்துக்காகவே டி. நகர் தொகுதி மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்தனர். இதே போல, 234 தொகுதிகளிலும் விஜயின் முகத்துக்காகவே அனைவரும் வாக்களித்தனர். தமிழகத்தின் முதல்வராக விஜய் வரவேண்டும் என்பதற்காகவே அனைவரும் வாக்களித்துள்ளனர். இவர்களுக்கு நாங்கள் எப்போதும் நன்றி கடன் பட்டுள்ளோம். மக்களுக்கு சேவை செய்வதே நோக்கமாகும் இதை விடுத்து விட்டு எக்காரணம் கொண்டும் ஊழல் செய்து கட்சியையோ, ஆட்சியையோ நடத்த மாட்டோம்.
மேலும் படிக்க: ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியிலிருந்து தோப்பு வெங்கடாசலம் விடுவிப்பு.. உட்கட்சிப் பூசலால் திமுக தலைமை அதிரடி நடவடிக்கை!




தவெகவில் இணைந்தவர்களுக்கு பலன் உண்டு
மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் தமிழக முதல்வரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜயை நம்பி கட்சியில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு கட்டாயம் பலன் உண்டு. அதிமுகவில் முன்னாள் அமைச்சராக இருந்து, அண்மையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த சி. விஜயபாஸ்கருக்கு விரைவில் கட்சி பதவியை முதல்வர் ஜோசப் விஜய் வழங்குவார்.
ஊழல் செய்தால் பதவியில் இருந்து நீக்கம்
இதை மீறி ஊழல் செய்தால் முதல்வர் எங்களை உடனடியாக பதவியில் இருந்து நீக்கம் செய்து விடுவார். இதனால்தான் நாங்கள் அனைவரும் ஒழுக்கமாக இருந்து வருகிறோம். தமிழகத்தில் ஒழுக்கமான ஒரே கட்சி தவெக தான். முதல்வர் விஜயை நம்பி வந்த அனைவருக்கும் அவரது அனுமதி பெற்று மிக விரைவில் பதவிகள் வழங்கப்படும். வருகிற உள்ளாட்சித் தேர்தலில் ஒற்றுமையாக இருந்து வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: “பாஜகவின் முதன்மை எதிரி தவெக தான்!”.. திமுக ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் வித்தியாசமில்லை.. நயினார் நாகேந்திரன் சாடல்!