அதிரடி காட்டும் முதல்வர் விஜய்.. குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்காக ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு!
CM Joseph Vijay Allocated Rs.340 Crore : தமிழகத்தில் குடிநீர் தேவை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக ரூ. 340 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டு உள்ளார். இதுகுறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தென்மேற்கு பருவமழை பொழிவு, குடிநீர் விநியோகம் மற்றும் வேளாண் பயிர் சாகுபடி நிலை குறித்த விரிவான ஆய்வுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை ( ஜூலை 31- ஆம் தேதி) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அணைகளின் நீர் இருப்பு, நீர் தேக்க அளவு, தமிழகத்தில் தற்போது வரை பெய்த தென்மேற்கு பருவ மழையின் தண்ணீர் அளவு, மழை அளவு குறைவாக பதிவாகியுள்ள மாவட்டங்களில் உள்ள நிலவரம், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் குடிநீர் விநியோகம், வேளாண் பணிகள் மற்றும் குருவை சாகுபடி நிலை, வேளாண் பயிர்களுக்கான குருவை தொகுப்பு விநியோகம், கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் இருப்பு மற்றும் குடிநீர் விநியோகம், பிற அத்தியாவசிய திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் செயல்பாடு ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
ரூ.340 கோடி நிதியை ஒதுக்கினார் முதல்வர் விஜய்
இதில், தமிழகத்தில் பாதுகாப்பான குடிநீர் மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகளை விரைவாக செய்து முடிப்பதற்காக, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறைகள் சார்பில் நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும், லாரிகள் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யவும் ரூ.330 கோடியும், கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு ரூ.10 கோடி என மொத்தம் ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டார்.
மேலும் படிக்க: தாய் என்றும் பார்க்கவில்லை.. தம்பி என்றும் நினைக்கவில்லை.. ரூ.1 கோடிக்காக அண்ணா நகரில் அரங்கேறிய இரட்டை கொலை!




மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்ய உத்தரவு
மேலும், மாநிலத்தின் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் வாரந்தோறும் திங்கள் கிழமை குடிநீர் விநியோகம் மற்றும் பிற அத்தியாவசிய திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் இயல்பை விட குறைந்த தென்மேற்கு பருவமழை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் தற்போது வரை மழைப்பொழிவு இயல்பை விட குறைவாகவே பெய்துள்ளது. இதில், சென்னை, கள்ளக்குறிச்சி, கடலூர், மதுரை, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் 19 முதல் 59 சதவீதம் வரை இயல்பை விட குறைவாகவும், செங்கல்பட்டு, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கும் குறைவாக மழை பொழிவு பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: பழனி கோயில் நில முறைகேடு வழக்கு.. ஆய்வு செய்வதற்காக 6 பேர் கொண்ட குழு அமைப்பு!