ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியிலிருந்து தோப்பு வெங்கடாசலம் விடுவிப்பு.. உட்கட்சிப் பூசலால் திமுக தலைமை அதிரடி நடவடிக்கை!
Thoppu Venkatachalam Removed from DMK Erode: ஈரோடு மாவட்டத்தில் உட்கட்சிப் பூசல் மற்றும் தேர்தல் தோல்விக்குப் பிறகு எழுந்த புகார்களைத் தொடர்ந்து, ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியிலிருந்து தோப்பு வெங்கடாசலம் விடுவிக்கப்பட்டு, அந்த மாவட்டம் பிற மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 01: ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே, மத்திய மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றியச் செயலாளர்களை நியமிப்பதில் தோப்பு வெங்கடாசலத்தின் பரிந்துரையைப் புறக்கணித்து, முத்துசாமிக்கு நெருக்கமானவர்களுக்கே பொறுப்புகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த தோப்பு வெங்கடாசலம், தனது தோல்விக்கு முத்துசாமியின் மறைமுகப் பணிகளே காரணம் எனப் பகிரங்கமாகத் தெரிவித்து வந்தார்.
இதையும் படிக்க: “சிக்கன் பிரியாணி சாப்பிட்டா குழந்தைங்க கெட்டுப்போயிடுவாங்களா?”.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!
உட்கட்சிப் பூசலும் பகிரங்கக் குற்றச்சாட்டுகளும்:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெற்ற தோல்வியைத் தொடர்ந்து, ஈரோடு மத்திய மாவட்டத்தில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியது. பெருந்துறைத் தொகுதியில் தனது தோல்விக்கு முன்னாள் அமைச்சர் முத்துசாமியின் நடவடிக்கைகளும் தலையீடுகளுமே காரணம் எனத் தோப்பு வெங்கடாசலம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
பதவி தேவையில்லை எனக் கோரிக்கை:
“நான் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தாலும், ஒன்றியச் செயலாளர்களை நியமிப்பது வரை முத்துசாமியின் ஆதிக்கமே உள்ளது. எனவே என்னை இந்தச் சுமைகளிலிருந்து விடுவித்து, பதவியைப் பறித்துக்கொள்ளுங்கள்” எனத் தோப்பு வெங்கடாசலம் கடந்த சில நாட்களுக்கு முன் திமுக தலைமையிடம் வெளிப்படையாகக் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஈரோடு மத்திய மாவட்டம் கலைப்பு:
தோப்பு வெங்கடாசலத்தின் கோரிக்கையை ஏற்று, அவரைப் பொறுப்பிலிருந்து விடுவித்த திமுக தலைமை, ஈரோடு மத்திய மாவட்ட அமைப்பையே மறுசீரமைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஈரோடு தெற்கு மாவட்டத்துடன் பெருந்துறை தொகுதி இணைக்கப்பட்டுள்ளது. ஈரோடு வடக்கு மாவட்டத்துடன் பவானி தொகுதி இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், திமுகவில் ஏற்கனவே இருந்த 78 அமைப்புக் சார்ந்த மாவட்டங்களில், ஈரோடு மத்திய மாவட்டம் கலைக்கப்பட்டு ஒரு மாவட்டம் குறைக்கப்பட்டுள்ளது.
திமுகவின் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு:
சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக தலைமை அமைத்துள்ள களஆய்வுக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், பல்வேறு மாவட்டங்களை இணைப்பதும் புதிய மாவட்டங்களை உருவாக்குவதுமான சீரமைப்புப் பணிகளைத் தலைமைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே ஈரோடு மாவட்டத்தில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தாய் என்றும் பார்க்கவில்லை.. தம்பி என்றும் நினைக்கவில்லை.. ரூ.1 கோடிக்காக அண்ணா நகரில் அரங்கேறிய இரட்டை கொலை!
தோப்பு வெங்கடாசலத்தின் அரசியல் பயணம்:
தோப்பு வெங்கடாசலம் முன்னாள் அதிமுக அமைச்சராக இருந்தவர். ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதிமுகவில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதிமுகவில் இருந்து வந்த மூத்த நிர்வாகி என்பதால், அவருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது.