“சிக்கன் பிரியாணி சாப்பிட்டா குழந்தைங்க கெட்டுப்போயிடுவாங்களா?”.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Chicken Biryani School Noon Meal: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என்று முதல்வர் முன்னிலையில் கோரிக்கை வைத்திருப்பதாகவும், சிக்கன் பிரியாணி சாப்பிடுவதால் குழந்தைகள் பலமும் ஊட்டச் சத்தும் பெறுவார்கள் என்றும் அமைச்சர் பதிலளித்துள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் 01: அரசுப் பள்ளி மாணவர்களின் சத்துணவுத் திட்டத்தில் வாரத்திற்கு ஒருமுறை ‘சிக்கன் பிரியாணி’ சேர்க்கப்பட வேண்டும் என்று தான் கோரிக்கை வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்தவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக, முதல்வரிடம் பல கோரிக்கைகளை தான் முன்வைத்ததாகவும், நம்முடைய அரசு பள்ளிக்கூட குழந்தைகளின் சீருடைகளை எப்படி மேம்படுத்தலாம், மாணவர்களுக்கு உப்புமா, கோதுமை உப்புமா, ரவை உப்புமா ஆகியவை வழங்கப்படுகின்றன.
மேலும் படிக்க: தாய் என்றும் பார்க்கவில்லை.. தம்பி என்றும் நினைக்கவில்லை.. ரூ.1 கோடிக்காக அண்ணா நகரில் அரங்கேறிய இரட்டை கொலை!
உப்புமாவில் இருந்து விடுதலை:
இந்த உப்புமாவில் இருந்து மாணவர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும். அதனால், உணவை ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் அறுசுவை நிறைந்தாவும் எப்படி மாற்றலாம்? என்று ஆலோசித்து வருகிறோம் என்றும் கூறியிருந்தார். இதற்காக அவர் வாரத்திற்கு ஒரு முறை சிக்கன் பிரியாணி போடலாமே என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதில் நிதி மற்றும் நிர்வாக ரீதியான பல நடைமுறைகள் இருப்பதால், முதலமைச்சரின் பரிசீலனையில் இக்கோரிக்கை உள்ளதாகவும், அதிகாரிகள் இது குறித்து விரிவாக ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த கருத்திற்கு ஒருசிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
வாரத்திற்கு ஒருமுறை சிக்கன் பிரியாணி:
இந்நிலையில், விமர்சனங்கள் குறித்து பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், நீதிக்கட்சி காலத்தில் தொடங்கிய உணவளிக்கும் திட்டம், பெருந்தலைவர் காமராசரின் மதிய உணவுத் திட்டம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம், முத்தமிழறிஞர் கலைஞரின் முட்டை வழங்கும் திட்டம் மற்றும் ஜெயலலிதாவின் வாராந்திர முட்டை திட்டம் எனத் தமிழ்நாட்டின் சத்துணவுத் திட்டம் படிப்படியாக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த வரிசையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்கப்பட வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசியல் திணிக்காதீர்கள்:
சிக்கன் பிரியாணி திட்டத்திற்கு திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவன் உள்ளிட்ட சிலர் தெரிவித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அமைச்சர், “சைவம் சாப்பிடும் குழந்தைகளுக்குச் சைவ உணவுகள் கிடைக்கின்றன. ஆனால் 90% அசைவம் சாப்பிடும் குழந்தைகளுக்குப் புரதச்சத்து மிக மிக முக்கியம். சிக்கன் பிரியாணி சாப்பிடுவதால் ஒரு குழந்தை கெட்டுப்போய்விடுமா என்ன? சிக்கன் பிரியாணி சாப்பிட்டால் உடலுக்கு வலிமையும், தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கும். குழந்தைகளுக்குப் பிரியாணி மிகவும் பிடிக்கும்; உணவில் தயவுசெய்து அரசியலைத் திணிக்காதீர்கள்” என்று கேட்டுகொண்டார்.
மேலும் படிக்க: பழனி கோயில் நில முறைகேடு வழக்கு.. ஆய்வு செய்வதற்காக 6 பேர் கொண்ட குழு அமைப்பு!
பள்ளி மாணவர்களுக்குப் புதிய சீருடை மாற்றம்:
சத்துணவுத் திட்டம் மட்டுமின்றி, அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடையிலும் மாற்றங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். பல காலமாக மாணவர்கள் ஒரே மாதிரியான சீருடைகளை அணிந்து வருவதால், தற்போதைய காலத்திற்கு ஏதுவாகவும், தரமானதாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சீருடை மாற்றத்தின் மூலம் மாணவர்களுக்குப் புதிய பொலிவு கிடைப்பதோடு, நெசவாளர்களின் வாழ்வாதாரமும் மேம்படும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது என்று கூறினார்.