பாஜகவுடன் கூட்டணி? தவெகவில் திடீர் ஆலோசனை… மாவட்ட செயலர்கள் கூறிய முக்கிய தகவல்!
Tvk Allaince Issue: தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக்கு செல்வது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தலைமையில் திடீர் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணிக்கு செல்லலாம் என்று 98 மாவட்ட செயலாளர் ஆதரவு தெரிவித்துள்ளனராம்.
தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணியை வீழ்த்தும் நோக்கில் தேசிய ஜனநாயக கூட்டணி பல்வேறு கட்ட வியூகங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தை தங்களது கூட்டணியில் இணைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், கூட்டணி தொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர்களின் கருத்துக்களை கேட்டறியுமாறு பொதுச் செயலாளர் ஆனந்த்துக்கு, கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்களுடன் காணொலி மூலமாக திடீர் ஆலோசனை கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை ( மார்ச் 13) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 120 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். 10 மாவட்ட செயலர்கள் பங்கேற்கவில்லை. கூட்டத்தில், நெருங்கி வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
கூட்டணிக்கு செல்லலாம் என 98 மா.செ.க்கள் கருத்து
இதைத் தொடர்ந்து, வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக்கு செல்லலாம் என்பது குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. பின்னர், சட்டமன்ற தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பாக தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதில், பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தேர்தலில் கூட்டணி அமைத்தால் தங்களது கட்சியின் வெற்றி உறுதி செய்யப்படும் என்றும், கட்சிக்கு பலம் கூடும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி, கூட்டணிக்கு செல்லலாம் என்று 98 மாவட்ட செயலாளர்கள் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் படிக்க: தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்.. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…




கூட்டணி வேண்டாம் என்று 22 மா.செக்கள் கருத்து
மீதமுள்ள 22 மாவட்ட செயலாளர்கள் கூட்டணிக்கு செல்ல வேண்டாம் என்றும், தனித்து களம் காணலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், தவெக கட்சித் தலைமை கூட்டணி அமைத்தாலும் சரி, தனியாக போட்டியிட்டாலும் சரி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக அனைத்து மாவட்ட செயலாளர்களும் கருத்து தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பேசிய பொதுச் செயலாளர் என். ஆனந்த், நாம் யாரை நம்பியும் கட்சி தொடங்கவில்லை. எனவே, சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், தனியாக போட்டியிட்டாலும் தங்களுக்கான வெற்றியை உறுதி செய்யும் வகையில் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
அரசியல் களத்தில் முக்கியத்துமான நிகழ்வு
தமிழக வெற்றிக் கழகத்தை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக பாஜக தலைமை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த திடீர் ஆலோசனை கூட்டம் அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கூட்டணி தொடர்பாக விஜய் அமைதி காத்து வரும் நிலையில், கட்சியின் 2- ஆம் கட்ட தலைவர்கள் கூட்டணிக்கு செல்லலாம் என்று கருத்து தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா?