‘ரஜினிகாந்த்திற்கு திமுக மிரட்டல் விடுத்தது… விஜய்க்கு மனவலிமை அதிகம் – ஆதவ் அர்ஜுனாவின் பேச்சால் சர்ச்சை
Adhav Arjuna on Rajinikanth’s Political Entry : ரஜினிகாந்திற்கு திமுக தரப்பில் பல மிரட்டல்கள் விடுத்து அவரை அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக்கொண்டனர். தற்போது அவர் ரெட் ஜெயண்ட் தயாரிக்கும் படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார் என ஆதவ் அர்ஜூனாவின் பேசிய நிலையில் அது சர்ச்சையாகி வருகிறது.
சென்னை, மார்ச் 12 : தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறி மாவட்ட தலைநகரங்களில் மார்ச் 12, 2026 அன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திரையுலகில் இருந்து எம்ஐிஆருக்கு பிறகு ஒரு பிரபலமான நடிகராக இருந்து அரசியலுக்கு வர நினைத்தவர் ரஜினிகாந்த். அவர் அரசியலில் நுழைந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என நினைத்தார் என்றார்.
‘ரஜினிகாந்த்திற்கு திமுக மிரட்டல்’
மேலும் பேசிய அவர், ஆனால் ரஜினிகாந்திற்கு திமுக தரப்பில் பல மிரட்டல்கள் விடுத்து அவரை அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக்கொண்டனர். தற்போது அவர் ரெட் ஜெயண்ட் தயாரிக்கும் படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார் என்றார்.
இதையும் படிக்க : தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று தவெக ஆர்ப்பாட்டம்.. விஜய் பங்கேற்கிறாரா?




மேலும் பேசிய அவர், இது ரஜினிகாந்த் மீதான விமர்சனம் கிடையாது. ஆனால் திமுகவிற்கு எதிராக விஜய் நிற்கிறார் என்றால் அவருக்கு மன வலிமை அதிகம். கரூர் சம்பவத்துக்கு பிறகும் நாங்கள் வெளியே வந்துவிட்டோம். தன்பிப்ட்ட விமர்சனங்களை வைத்த போது விஜய் அமைதியாக வீட்டில் அமரவில்லை. மகளிர் தினத்தன்று பெண்களுக்கான 12 வாக்குறுதிகளை அவர் வெளியிட்டார்.
மேலும் மற்ற ஊர்களில் எந்த பிரச்னையும் ஏற்படாதபோது கரூர் பரப்புரையின் போது மட்டும் செருப்பு வீசப்பட்டது ஏன். திருவாருரில் விஜய்க்கு வந்த கூட்டத்தை பார்த்து திமுகவுக்கு பயம் ஏற்பட்டது. எனக்கு மட்டும் சம்மன் அனுப்பப்பட்டதாக செந்தில் பாலாஜி சொல்கிறார். காரணம் அவர் தான் முதல் குற்ற்வாளி என்று பேசினார். அவரது பேச்சு ரஜினிகாந்த் ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க : திருச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த ரூ.5,650 கோடி திட்டங்கள் என்னென்ன!
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் மார்ச் 12, 2026 அன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 17 வயது சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட செய்தி நெஞ்சை பதற வைக்கிறது. அதே போல மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, இரவு முழுவதும் காட்டுப்பகுதியில் பரிதவித்து காலையில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து காவல் நிலையத்தை அடைந்திருக்கிறார்.
ஒரு வராத்துக்குள் இதுபோன்ற எண்ணற்ற வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதையெல்லாம் முதல்வரால் எப்படி மௌனமாக இருக்க முடிகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை. குழந்தைகளுக்கு, முதியோர்களுக்கு பாதிப்பில்லை. இளைஞர்களுக்கு பாதுகாப்பு என்பதே தமிழ்நாட்டில் இல்லாத நிலை என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.