இலங்கை கடற்படையினர் தொடர் அத்துமீறல்… ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கைது… படகு-மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல்!
Rameswaram Fishermen: ஆழ் கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்து அழைத்து சென்றது. தமிழக மீனவர்கள் மீதான தொடர் கைது சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுக்கு சொந்தமான மீன்பிடி படகில் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த வழியாக இலங்கை கடற்படையினர் படகில் ரோந்து வந்தனர். அப்போது, அவர்கள் தமிழக மீனவர்களின் படகில் ஏறி விசாரணை மேற்கொண்டதுடன், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்தனர். மேலும், மீன்பிடி வலை உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் படகு ஆகியவற்றை பறிமுதல் செய்து மன்னார் பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு, ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரும் மன்னார் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடரும் தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கை
அவர்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே போல, கடந்த மாதம் வெவ்வேறு நாட்களில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து அழைத்து சென்றனர். அவர்கள், இலங்கையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய் சங்கருக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கோடை மழை கொட்டும்.. வெப்பமும் உயரும்.. வானிலை நிலவரம் இதோ..




மீனவர்கள் தமிழகம் திரும்புவதில் நீடிக்கும் சிக்கல்
அவர் கடிதம் எழுதிய சில நாட்களில் மேலும் 22 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். இதனிடையே, ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் தமிழகம் வருவதில் சில குளறுபடிகள் நீடித்து வருவதால் அந்த 3 மீனவர்கள் மற்றும் சிறையில் உள்ள மீனவர்கள் தமிழகம் திரும்புவதற்கு தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனை நிவர்த்தி செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தப்பட்டிருந்தது.
மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி
இவ்வாறாக இலங்கை மற்றும் தமிழக இடையே மீனவர்கள் கைது விவகாரம் உச்சகட்ட நிலையில் இருக்கும்போது, தற்போது 5 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்துள்ளது மீண்டும் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, இலங்கையை சேர்ந்த 3 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய கடலோர காவல் படை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தட்டுப்பாடு அச்சம்.. பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்.. கேன்கள், பக்கெட்டுகளில் நிரப்பிச் செல்வதால் பரபரப்பு..