7 முக்கிய திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு உத்தரவு – எங்கெல்லாம் தெரியுமா?
Tamil Nadu Land Acquisition : தமிழ்நாட்டில் மின் உற்பத்தி, சுரங்க விரிவாக்கம், தொழிற்பூங்கா, மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக தூத்துக்குடி, கடலூர், திருவண்ணாமலை மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை, செப்டம்பர் 19 : தமிழ்நாட்டில் மின் உற்பத்தி, சுரங்க விரிவாக்கம், தொழிற்பூங்கா, மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக தூத்துக்குடி, கடலூர், திருவண்ணாமலை மற்றும் சென்னை மாவட்டங்களில் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 1997-ன் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையைகூடுதல் தலைமைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ளார்.
உடன்குடி அனல் மின் திட்டம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மானாடுதண்டுபத்து மற்றும் உடன்குடி பகுதிகளில் உடன்குடி அனல் மின் திட்டத்தின் 2 மற்றும் 3 ஆம் நிலை பணிகளுக்காக பல்வேறு நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதில் உடன்குடி கிராமத்தில் உள்ள 2 பகுதிகளில் முறையே 11.5900 ஹெக்டேர் மற்றும் 10.8350 ஹெக்டேர் நிலங்களும், மானாடுதண்டுபத்து பகுதியில் 11.0950 ஹெக்டேர் நிலமும் கையகப்படுத்தப்படவுள்ளன.
இதையும் படிக்க : காமராஜர் காலை உணவு திட்டம் 2.0.. முதல்வர் தலைமையில் அதிரடி ஆலோசனைக் கூட்டம்.. ஆக்சனில் இறங்கிய ஜோசப் விஜய்!



என்எல்சி சுரங்க விரிவாக்கம்
கடலூர் மாவட்டத்தில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காகவும் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள வானதிராயபுரம் பகுதியில் சுரங்கம்-1ஏ விரிவாக்கத்திற்காக 1.28.56 ஹெக்டேர் நிலமும், விருத்தாசலம் வட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் பகுதியில் சுரங்கம் 1 விரிவாக்கத்திற்காக 5.04.00 ஹெக்டேர் நிலமும் கையகப்படுத்தப்படவுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிலையம்
சென்னை மாவட்டம் எழும்பூர் பகுதியில் மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் சேத்துபட்டு மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்காக 24 சதுர மீட்டர் காலி நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இந்த நிலம் எழும்பூர் பகுதி-1 கிராமத்தில், வார்டு எண் 24 மற்றும் பிளாக் எண் 24ல் உள்ள சர்வே எண் 404/1ல் அமைந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தோணுகால் மற்றும் நாலாட்டின்புதூர் கிராமங்களில் பறப்பியல் பயிற்சி நிறுவனம் அமைக்கவும் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேற்சொன்ன இரு கிராமங்களிலும் சேர்த்து சுமார் 2.98 ஹெக்டேர் நிலம் இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட உள்ளது.
இதையும் படிக்க : Tamil Nadu weather : நாளை இந்த 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்
சிப்காட் தொழிற்பூங்கா
கடலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்காக தியாகவல்லி மற்றும் குடிகாடு பகுதிகளில் கணிசமான அளவில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. தியாகவல்லி கிராமத்தில் மூன்று பகுதிகளில் மொத்தம் 35 ஹெக்டேருக்கும் அதிகமான நிலமும், குடிகாடு கிராமத்தில் சிப்காட் தொழிற்பூங்காவின் மற்றொரு பகுதிக்காக 30.5 ஹெக்டேர் நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளது. அதே போல திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் உள்ள மேல்மா கிராமத்திலும் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்காக 22.16 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது.
மேற்சொன்ன இந்த திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவை வழங்கும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.