நெருங்கும் இடைத்தேர்தல்.. அதிமுக நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.. சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி பெயர்கள் இல்லை..
ADMK Star Campaigners: தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 40 நட்சத்திர பேச்சாளர்களின் பெயர்களையும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 20 பேரின் பெயர்களையும் சமர்ப்பிக்கலாம். அதன்படி, அதிமுகவின் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.
செப்டம்பர் 18, 2026: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் 40 நட்சத்திர பேச்சாளர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 தொகுதிகளில் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தற்போதைக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
இரண்டு தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தல்:
சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவிய நிலையில், இந்த இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், திமுக, அதிமுக, இடதுசாரிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.
மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதசம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
அதேபோல், தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து அக்கட்சியில் இணைந்த சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இரண்டு தொகுதிகளிலும் தலைவர்கள் பிரச்சாரம்:
வேட்பாளர் பட்டியல்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், செப்டம்பர் 20ஆம் தேதி முதல் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரண்டு தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இரண்டு தொகுதிகளிலும் 4 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுராந்தகம் தொகுதியில் செப்டம்பர் 25, 26 மற்றும் அக்டோபர் 3 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாராபுரம் தொகுதியிலும் இரண்டு நாட்கள் தங்கி பிரச்சாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: மதுரையில் 11-ஆம் வகுப்பு மாணவர் மர்ம மரணம்.. ஆணவக் கொலை என பெற்றோர் குற்றச்சாட்டு.. சிபிசிஐடி விசாரணை கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!
அதிமுகவில் 40 நட்சத்திர பேச்சாளர்கள்:
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 40 நட்சத்திர பேச்சாளர்களின் பெயர்களையும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 20 பேரின் பெயர்களையும் சமர்ப்பிக்கலாம். அதன்படி, அதிமுகவின் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.
அந்தப் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி, கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தம்பிதுரை, பொள்ளாச்சி ஜெயராமன், வளர்மதி, ஓ.எஸ். மணியன், காமராஜ் உள்ளிட்ட 40 பேர் இடம்பெற்றுள்ளனர்.
அதிமுகவில் உட்கட்சி விவகாரம் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியில் இருப்பதாகக் கூறப்படும் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோரின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.