திருச்சியில் எமன் ரூபத்தில் வந்த மின்னல்.. மனைவியை தவிக்கவிட்டு சென்ற புதுமாப்பிள்ளை.. திருமணமான 7 மாதத்தில் சோகம்!
Trichy Latest Crime News : திருச்சி மாவட்டத்தில் திருமணம் ஆன புது மாப்பிள்ளை இரு சக்கர வாகனத்தில் சென்ற நிலையில், மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் ( 32 வயது). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று இருந்தது. இந்த நிலையில், கார்த்திக் இன்று வெள்ளிக்கிழமை ( செப்டம்பர் 18- ஆம் தேதி) திருச்சி மண்ணச்சநல்லூர் புறவழிச்சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, திடீரென பலத்த இடி மற்றும் மின்னலுடன் கன மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையையும் பொருட்படுத்தாமல் புது மாப்பிள்ளை கார்த்திக் தனது இரு சக்கர வாகனத்தில் மழையில் நனைந்தவாறு சென்று கொண்டிருந்தார். அப்போது. எதிர்பாராத விதமாக திடீரென கார்த்திக்கை மின்னல் தாக்கியது. இதில், கார்த்திக் பைக்கில் இருந்து கீழே விழுந்து உயிருக்கு போராடினார்.
மின்னல் தாக்கியதில் உயிரிழந்த புது மாப்பிள்ளை
அப்போது, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் புது மாப்பிள்ளை கார்த்திக் கீழே விழுந்து உயிருக்கு போராடுவதை கண்டு அவரை மீட்டனர். தொடர்ந்து, அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியில் புது மாப்பிள்ளை கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரது சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும் படிக்க: அச்சுறுத்தும் டெங்கு.. பாதிப்பு 16,577 ஆக உயர்வு.. சென்னையில் ஒரே நாளில் 87 பேருக்கு தொற்று!




மருத்துவமனையில் கதறி அழுத்த புதுமண பெண்
இதனிடையே, கார்த்திக் உயிரிழந்த சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிந்த நிலையில், கார்த்திக்கின் மனைவி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். அங்கு, கார்த்திக்கின் உடலைப் பார்த்து அனைவரும் கதறி அழுதனர். இந்த நிகழ்வு அங்கு இருந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக்கின் பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அய்யம்பாளையம் கிராமத்தில் பெரும் சோகம்
அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற போலீசார் அங்கும் விசாரணை மேற்கொண்டனர். திருமணம் முடிந்த 7 மாதங்களிலேயே புது மாப்பிள்ளை கார்த்திக் மின்னல் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அய்யம்பாளையம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: மதுரையில் 11-ஆம் வகுப்பு மாணவர் மர்ம மரணம்.. ஆணவக் கொலை என பெற்றோர் குற்றச்சாட்டு.. சிபிசிஐடி விசாரணை கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!