மதுரையில் 11-ஆம் வகுப்பு மாணவர் மர்ம மரணம்.. ஆணவக் கொலை என பெற்றோர் குற்றச்சாட்டு.. சிபிசிஐடி விசாரணை கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!
Madurai Student Death Case: மதுரையில் 11-ஆம் வகுப்பு மாணவர் தமிழ்ச்செல்வனின் மர்ம மரணம் ஆணவக் கொலையாக இருக்கலாம் எனப் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், வழக்கைச் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி இடதுசாரி அமைப்பினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தடையை மீறி நுழைந்தவர்களைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கி கைது செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
மதுரை, செப்டம்பர், 18: மதுரை ஆணையூர் கூடல் புதூர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்புப் பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன், கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி முட்புதர் குட்டை ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் கூடல் புதூர் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்ததால், அப்பெண்ணின் குடும்பத்தினரால் தனது மகன் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பெற்றோர் குற்றம் சாட்டி வருகின்றனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகும் 13 நாட்களாக உடலைப் பெற்றுக் கொள்ளாமல் அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையிலேயே வைக்கப்பட்டிருக்கும் நிலையில், வழக்கைக் சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரி போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
இதையும் படிக்க: களத்தில் இறங்கும் CM விஜய்!.. தவெக வேட்பாளர்களை ஆதரித்து செப்டம்பர் இறுதியில் தீவிர பிரச்சாரம் செய்ய திட்டம்!!
பிரேதப் பரிசோதனை அறிக்கை தரும் சந்தேகங்கள்:
சம்பவத்தன்று 6 நண்பர்களுடன் குளிக்கச் சென்ற தமிழ்ச்செல்வன் மட்டும் வீடு திரும்பவில்லை என்பதும், மற்ற 5 நண்பர்கள் மட்டும் திரும்பியதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே வெளியாகியுள்ள பிரேதப் பரிசோதனை அறிக்கையில், நீரில் மூழ்கியதாகக் கூறப்படும் மாணவனின் நுரையீரலில் தண்ணீர் எதுவும் இல்லை என்றும், மாறாக ஒருவித திரவப் பொருள் மட்டுமே காணப்பட்டதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இது தற்செயலான விபத்து அல்ல, திட்டமிட்ட படுகொலைதான் என்ற பெற்றோரின் குற்றச்சாட்டுக்கு மேலும் வலு சேர்ந்துள்ளது. எனவே, உள்ளூர் காவல்துறையின் விசாரணையில் திருப்தியில்லை என்றும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கைச் சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடையை மீறி ஆட்சியர் அலுவலக முற்றுகை:
வழக்கை உடனடியாகச் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தி SFI, DYFI மற்றும் அனைத்து இந்திய மாதர் சங்கம் ஆகிய இடதுசாரி அமைப்புகள் சார்பில் திருவள்ளுவர் சிலையிலிருந்து பேரணியாக வந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். காவல்துறையின் தடையை மீறி பிரதான நுழைவாயில் கதவுகளைத் தகர்த்து உள்ளே நுழைந்த நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், ஆட்சியர் பயணிக்கும் வழியில் அமர்ந்து தீவிர முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், காவலத்துறை இந்தச் சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல், அவர்களுக்குச் சாதகமாகச் செயல்படுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனையடுத்து, அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பலவந்தமாகத் தரதரவென இழுத்துச் சென்றும், குண்டுக்கட்டாகத் தூக்கியும் பேருந்துகளில் ஏற்றி அதிரடியாகக் கைது செய்தனர்.
இதையும் படிக்க: ஒரு பக்கம் ரூ.16 கோடி.. மறுபக்கம் ரூ.7,000 மட்டுமே!.. இடைத்தேர்தலில் மோதும் வேட்பாளர்களின் சொத்து விவரம் வெளியீடு!!
அரசியல் தலைவர்கள் கண்டனம்:
இச்சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக எம்பி கனிமொழி மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். காவல்துறையினர் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறியாமல் விபத்து என முடித்துவிட முயல்வதாக அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே நடைபெற்ற இந்த அதிரடிக் கைது நடவடிக்கையால் மதுரை மாநகரில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.