பிரசாதத்தை சாப்பிட்ட வளர்ப்பு நாய்.. ஆத்திரத்தில் மருமகளை தீர்த்து கட்டிய மாமனார்.. தஞ்சாவூரில் நிகழ்ந்த வினோத கொலை!
Thanjavur Murder Incident : தஞ்சாவூர் மாவட்டத்தில் கோவில் பிரசாதத்தை வளர்ப்பு நாய் சாப்பிட்ட சம்பவத்தில் மருமகளை, மாமனார் கடப்பாரையால் அடித்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், மாமனாரை அம்மாபேட்டை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் திருமணம் ஆகி குடும்பத்துடன் தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அம்மாபேட்டையில் அமைந்துள்ள கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக வள்ளி தனது மாமனார் வீடான சிவசாமி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, அவர்கள் அனைவரும் கோவில் திருவிழாவிற்கு சென்றனர். அங்கு, திருவிழாவை பார்த்துவிட்டு அனைவரும் வீடு திரும்பினர். அப்போது, கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சிவசாமியின் மனைவி வாங்கி வந்து தனது கணவர் சிவசாமிக்காக வீட்டில் வைத்திருந்தார். அப்போது, மருமகள் வள்ளி வளர்த்த நாய் அந்த பிரசாதத்தை சாப்பிட்டதாக தெரிகிறது. இதை பார்த்த, அங்கிருந்தவர்கள் இந்த நாயை துரத்தி விட்டனர்.
பிரசாதத்தை நாய் சாப்பிட்டதால் மாமியார்-மருமகள் இடையே தகராறு
இருந்தாலும், இது தொடர்பாக மாமியார் மலர்கொடி மற்றும் மருமகள் வள்ளி இடையே தகராறு ஏற்பட்டது. இதில், மாமியாரை, மருமகள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தனது கணவர் சிவசாமியிடம், மலர்கொடி தெரிவித்துள்ளார். இதை கேட்ட சிவசாமி ஆத்திரம் அடைந்து, மருமகளை தட்டி கேட்பதற்காக கடப்பாரையை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். அங்கு, தனது மருமகள் வள்ளியிடம் இது தொடர்பாக தட்டிக் கேட்டுள்ளார். இதில், மாமனார் மற்றும் மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: திருச்சியில் எமன் ரூபத்தில் வந்த மின்னல்.. மனைவியை தவிக்கவிட்டு சென்ற புதுமாப்பிள்ளை.. திருமணமான 7 மாதத்தில் சோகம்!




மருமகளை கடப்பாரையால் தாக்கி கொன்ற மாமனார்
ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், மாமனார் சிவசாமி கொண்டு சென்ற கடப்பாரையால், மருமகள் வள்ளியை பலமாக தாக்கினார். இதில், வள்ளிக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அத்துடன், அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் அங்கு சென்ற போது, மாமனார் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். உடனே, வள்ளியை அருகில் இருந்தவர்கள் மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாமனாரை கைது செய்த அம்மாபேட்டை போலீசார்
ஆனால், ஆம்புலன்ஸ் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வள்ளி பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து, அவரது சடலம் உடல் கூறாய்வு மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பள்ளியின் குடும்பத்தினர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்ற போலீசார் அங்கும் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, மருமகளை கொலை செய்த மாமனார் சிவசாமி மலர் கொடியை கைது செய்தனர்.
மேலும் படிக்க: சென்னையில் வங்கி ஊழியரிடம் ரூ. 11 லட்சம் வழிப்பறி.. நடுரோட்டில் நடந்த சம்பவம்.. பிரபல ரவுடி உள்பட 4 பேரை தட்டி தூக்கிய தனிப்படை!