சென்னையில் வங்கி ஊழியரிடம் ரூ. 11 லட்சம் வழிப்பறி.. நடுரோட்டில் நடந்த சம்பவம்.. பிரபல ரவுடி உள்பட 4 பேரை தட்டி தூக்கிய தனிப்படை!
Chennai Crime : சென்னையில் தனியார் வங்கி ஊழியரிடம் ரூ. 11 லட்சம் வழிப்பறியில் ஈடுபட்டதாக பிரபல ரவுடி உள்ப ட 4 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .
சென்னை மாவட்டம், குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். தனியார் வங்கி ஊழியரான இவர், சம்பவத்தன்று பாரிமுனை பகுதியில் வசித்து வரும் ஒருவரிடம் செலவுக்காக ரூ. 11 லட்சம் வாங்கி இருந்தார். அந்த பணத்தை, இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு டி. நகர் வாணி மகால் எதிரே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கார்த்திகேயனை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ. 11 லட்சத்தை பறித்து சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை பாண்டி பஜார் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கார்த்திகேயன் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைப்பு
அத்துடன், தேனாம்பேட்டை உதவி கமிஷனர் ஜமால் மற்றும் பாண்டி பஜார் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையில் அடிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையானது சம்பவம் நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளை கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், கொள்ளை கும்பலின் உருவங்கள் மற்றுமி இரு சக்கர வாகனங்களின் பதிவெண்கள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில், அவர்கள் குறித்த விவரங்கள் போலீசாருக்கு தெரியவந்தது.
மேலும் படிக்க: மதுரையில் 11-ஆம் வகுப்பு மாணவர் மர்ம மரணம்.. ஆணவக் கொலை என பெற்றோர் குற்றச்சாட்டு.. சிபிசிஐடி விசாரணை கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!




ரவுடி உள்பட 4 பேரை கைது செய்த தனிப்படை
அதன் அடிப்படையில், அந்த கும்பல் வேளச்சேரி பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்ற நிலையில், போலீசார் வருவதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றது. உடனே, அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதில், அருண்குமார் ( 37 வயது), பப்லு ( 32 வயது), ஆனந்த செல்வன் ( 32 வயது), முகமது பாசில் ( 32 வயது) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ரூ. 11 லட்சம் ரொக்கம் குறித்து போலீசார் விசாரணை
இதை தொடர்ந்து, அவர்களிடம் இருந்து ரூ. 2 லட்சத்து 38 ஆயிரம், ஒரு பைக், 4 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதில், கைதான ஆனந்த செல்வன், பப்லு ஆகியோர் மீது ஏற்கனவே வழிப்பறி வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. பின்னர், 4 பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, ரூ.11 லட்சத்திற்கான ஆதாரங்கள் இல்லாததால் அது ஹவாலா பணமா என்பன கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: திருச்சியில் எமன் ரூபத்தில் வந்த மின்னல்.. மனைவியை தவிக்கவிட்டு சென்ற புதுமாப்பிள்ளை.. திருமணமான 7 மாதத்தில் சோகம்!