தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு.. தவிக்கும் பொதுமக்கள், விநியோகஸ்தர்கள்.. பின்னணியில் இருக்கும் உண்மை!!
Shortage of Aavin Milk Supply in Tamil Nadu: தமிழகத்தில் ஆவின் பால் விநியோகத்தில் பரவலாகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகப் பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் எழுந்துள்ளன. தனியார் நிறுவனங்களின் போட்டிகள், ஆவின் சந்தித்த நிதி இழப்புகள் மற்றும் பால் கொள்முதல் தேவைகளில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகியவை குறித்த முழுமையான பின்னணி செய்தித் தொகுப்பு.
சென்னை, செப்டம்பர் 18: தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின், மாநிலம் முழுவதும் நாள்தோறும் கோடிக்கணக்கான மக்களுக்கு மலிவான விலையில் தரமான பாலை வழங்கி வருகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாகச் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் விநியோகத்தில் தொடர் தட்டுப்பாடு நிலவி வருவதாக முகவர்களும் நுகர்வோரும் குற்றம் சாட்டி வருகின்றனர். தினமும் ஆவின் பாலகங்களை நம்பி வரும் சாமானிய மக்களுக்குக் கேட்கும் அளவுக்குப் பால் கிடைப்பதில்லை என்றும், வழக்கமான விநியோகத்தில் பாதியளவு மட்டுமே விநியோகிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதையும் படிக்க: சேலத்தின் ஆவின் நெய் தட்டுப்பாடு… கர்நாடகாவின் நந்தினி நெய்யை விற்பதால் சர்ச்சை
தனியார் நிறுவனங்களின் போட்டி:
தமிழகத்தில் நாள்தோறும் சுமார் 3 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகும் நிலையில், அதில் சுமார் 36 லட்சம் லிட்டர் பாலுக்கான விநியோக சந்தையை ஆவின் வைத்திருந்தது. ஆனால், தற்போதைய சூழலில் ஆவினுக்கான பால் கொள்முதல் படிப்படியாகக் குறைந்து, நாளொன்றுக்கு 27 லட்சம் லிட்டர் என்ற அளவுக்குச் சரிவடைந்துள்ளது. தனியார் பால் நிறுவனங்கள் பாலின் கொழுப்பு அளவைக் கணக்கில் கொள்ளாமல் விவசாயிகளுக்கு லிட்டருக்கு ரூ.43 முதல் ரூ.45 வரை வழங்குகின்றன. மாறாக, ஆவின் நிறுவனம் கொழுப்பு அளவுக்கு ஏற்பக் தொகையைக் குறைத்து, சில நேரங்களில் லிட்டருக்கு ரூ.34 வரை மட்டுமே வழங்குவதால், பெரும்பாலான பால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களுக்குப் பால் வழங்கி வருகின்றனர்.
சென்னை விநியோகத்தில் சரிவு:
சென்னையில் நாள்தோறும் 16.5 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களில் விற்பனை 25% வரை குறைந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இது மேலும் 10% வரை குறைக்கப்பட்டதாக முகவர்கள் தெரிவிக்கின்றனர். 100 லிட்டர் பால் கேட்கும் கடைகளுக்கு 50 முதல் 60 லிட்டர் மட்டுமே கிடைப்பதாக விநியோகஸ்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இடைப்பட்ட பற்றாக்குறையைச் சரிசெய்ய ஆவின் நிர்வாகம் பால் உபபொருட்களைப் பயன்படுத்துவதாகக் கூறினாலும், களத்தில் பால் பற்றாக்குறை தொடர்ந்து நீடிக்கிறது.
இதையும் படிக்க: ஒரு பக்கம் ரூ.16 கோடி.. மறுபக்கம் ரூ.7,000 மட்டுமே!.. இடைத்தேர்தலில் மோதும் வேட்பாளர்களின் சொத்து விவரம் வெளியீடு!!
ஆவின் நிதி இழப்பும் தீர்வுகளும்:
ஆவின் நிறுவனம் சந்தித்து வரும் தொடர் நிதி இழப்பைக் குறைப்பதற்காகவே அதிகாரிகள் திட்டமிட்டுப் பால் விநியோக அளவைக் குறைத்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தனியார் நிறுவனங்கள் சமன்படுத்தப்பட்ட பாலை ஒரு லிட்டர் ரூ.57-க்கு விற்பனை செய்யும் சூழலில், ஆவின் ரூ.40-க்கு விற்பனை செய்கிறது. பால் வாங்குவது, பதப்படுத்துவது மற்றும் விநியோகிப்பது போன்ற உற்பத்திச் செலவுகளுக்கு ஏற்ப விற்பனை விலை இல்லாததால், 2025-26 ஆம் நிதியாண்டில் மட்டும் ஆவின் நிறுவனம் சுமார் ரூ.143 கோடி நிதி இழப்பைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. குஜராத்தின் அமுல் நிறுவனத்தைப் போல அரசின் தலையீடின்றி தொழில்முறையில் முழு தன்னாட்சியுடன் ஆவின் செயல்பட வழிவகுப்பதே இதன் நீண்டகாலப் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும் எனக் கணிக்கப்படுகிறது.