தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. தொடங்கப்படும் தேதி அறிவிப்பு.. முழு விவரம்!
Thaimaman Thanga Mothiram : தமிழகத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வருகிற செப்டம்பர் 28- ஆம் தேதி தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜயால் தொடங்கி வைக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வந்தது. இந்த நிலையில், வருகிற செப்டம்பர் 28- ஆம் தேதி ( திங்கள்கிழமை) தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். அதன்படி, கடந்த ஜூன் 22- ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
100 குழந்தைகள் வீதம் தங்க மோதிரம்
இதில், செப்டம்பர் 28- ஆம் தேதி முதல் 107 மையங்களில் தினமும் 100 குழந்தைகள் வீதம் தங்க மோதிரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மோதிரமானது மருத்துவமனையில் குழந்தை பிறந்து வீடு திரும்பும் போது வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், தயார் செய்யப்பட்ட மாதிரி தங்க மோதிரத்தை முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் பார்வையிட்டார். தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது, தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் மோதிரம் வழங்கப்படும் என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தெரிவித்து இருந்தார்.
மேலும் படிக்க: காமராஜர் காலை உணவு திட்டம் 2.0.. முதல்வர் தலைமையில் அதிரடி ஆலோசனைக் கூட்டம்.. ஆக்சனில் இறங்கிய ஜோசப் விஜய்!




முதல் கட்டமாக ரூ.755.83 கோடி ஒதுக்கீடு
தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்த நிலையில், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், இந்த திட்டத்துக்காக ரூ.755.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்திருந்தது. இதை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த திட்டத்துக்கான தங்க மோதிரங்களை தயார் செய்வதற்காக ஒப்பந்தங்கள் வெளியிடப்பட்டன.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் டெண்டர்
இதில், 11 நிறுவனங்கள் டெண்டர் எடுப்பதற்காக போட்டியிட்டது. இதில், சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட முக்கிய தங்க நகை நிறுவனங்கள் போட்டியில் பங்கேற்றது. ஆனால், ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் ஒரு பைசாவுக்கு டெண்டரை கைப்பற்றியது. இதற்கு அடுத்தபடியாக கல்யாண் ஜுவல்லர்ஸ் ஆகிய 2 நிறுவனங்கள் டெண்டர் எடுத்தது. இதில், ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு 70 சதவீதமும், கல்யாண் ஜூவல்லர்ஸ் 30 சதவீதமும் தங்க மோதிரம் செய்ய வேண்டும் என்று டெண்டிரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தங்க மோதிரங்களை விரைந்து கொள்முதல் செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 7 முக்கிய திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு உத்தரவு – எங்கெல்லாம் தெரியுமா?