மதுபான பார் டெண்டரில் புதிய தளர்வு.. இனி புதியவர்களுக்கு வாய்ப்பு.. அரசின் அதிரடி அறிவிப்பு!
Liquor Bar Tenders Relaxations : தமிழகத்தில் மதுபான கூடங்கள் அமைப்பதற்கான டெண்டரில் தமிழக அரசு புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன் மூலம், புதிய நபர்களும் டெண்டரில் பங்கேற்று மதுபான கூடங்களை அமைக்க முடியும். இது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் சில்லரை கடைகள் மூலமாக மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. இந்த கடைகளை ஒட்டியவாறு குளிர்பானம், தின்பண்டங்கள் ஆகியவற்றை விற்பதற்கான மதுக்கூடம் தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. இதற்காக, தமிழக அரசு டெண்டர் கோரப்பட்டு தேர்வாகும் நபர்களுக்கு மது கூடம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. டெண்டருக்கான நிபந்தனையில், மது கூடம் நடத்துவதற்கு அதன் இடத்தின் உரிமையாளரிடம் தடையில்லா சான்றிதழ் பெறுவது அவசியமாகும். ஆனால், பல கட்டட உரிமையாளர்கள் மதுக்கடைகளுக்கு இடம் வழங்கி மது கூடங்களையும் நடத்தி வருகின்றனர். இதனால், மது கூடங்கள் அமைப்பதற்கு கோரப்படும் டெண்டரின் புதிய நபர்களால் பங்கேற்க முடியாமல் இருந்து வருகிறது. இதனால், பல ஆண்டுகளாக மது கூடங்களை நடத்தி வருவோரை டென்டரில் பங்கேற்று தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் நிறுவனத்துக்கு பெரும் நிதி இழப்பு
மேலும், அவர்கள் குறைந்த அளவிலான விலைப்புள்ளி வழங்கி, மதுக்கூட ஒப்பந்தத்தை எடுப்பதுடன், டாஸ்மாக் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை சரிவர செலுத்துவது கிடையாது. இதன் காரணமாக, டாஸ்மாக் நிறுவனத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது. மது கூட நடத்துவதற்கான ஒப்பந்தம் கடந்த ஜூன் 30- ஆம் தேதி நிறைவடைந்தது. புதிதாக டெண்டர் கோரப்பட இருப்பதால், மது கூடங்களுக்கான ஒப்பந்தம் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நோ பெட்ரோல்.. நோ டிராஃபிக்.. சென்னையில் வெள்ளை குதிரையில் சொமேட்டோ ஊழியர் உணவு டெலிவரி..!




மதுக்கூடங்கள் அமைப்பதற்கான வழிமுறைகள்
அதன்படி, ஆகஸ்ட் முதல் வாரத்தில் மதுக்கூடங்களுக்கு ஒப்பந்தம் வழங்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுக்கூடங்கள் அமைப்பதற்கான விதிகளில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளது. அதில், மது கடையுடன் இணைந்து மதுகூடம் நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், இனி மதுக்கடையை ஒட்டிய இடத்தில் அல்லது மது கடையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவுக்குள் எங்கு வேண்டுமானாலும் மது கூடம் அமைக்கலாம்.
புதிய நபர்களும் மதுக்கூடங்களை நடத்த முடியும்
அத்துடன், அந்த மது கூடத்துக்கான குறைந்தபட்ச இடத்தின் பரப்பளவு 15 சதுர மீட்டரில் இருந்து 20 சதுர மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த புதிய விதியால் மது கூடங்களுக்கான டென்டர்களில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே தேர்வாகி வந்த நிலையில், அந்த நிலை மாற்றப்பட்டு இனி புதியவர்களும் டெண்டரில் பங்கேற்று மதுக்கூடங்கள் நடத்துவதற்கான அனுமதியை பெற்று அதனை நடத்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும் படிக்க: சிவகாசி விபத்து எதிரொலி.. விதியை மீறி பட்டாசு தயாரிப்பு.. 11 பேர் அதிரடி கைது!