தலைமைச் செயலகம் இடம் மாறுகிறதா? எந்த இடம் தெரியுமா.. அதிகாரிகள் தீவிர ஆலோசனை!
Tamil Nadu Secretariat Relocating : தமிழக தலைமை செயலகம் வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எந்த இடத்துக்கு இட மாற்றம் செய்யப்படும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம் .
தமிழக அரசின் தலைமைச் செயலகம் சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வருகிறது. இந்த இடமானது இந்திய ராணுவத்துக்கு சொந்தமான இடம் என்பதால் இதற்கு தமிழக அரசு வாடகை செலுத்தி வருகிறது. இந்த கோட்டை வளாகத்தில் பாரம்பரியமான கட்டிடத்தில் தலைமைச் செயலகம் செயல்படுவதால் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரின் அறைகள் இங்கு உள்ளன. இதன் காரணமாக தலைமைச் செயலகத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதே போல, முதல்வர் விஜய் அலுவலக அறை பகுதி மற்றும் அந்த பகுதியில் உள்ள அதிகாரிகள் அறைகள் முதல் மாடியில் இருப்பதால் அங்கும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதேபோல, எம்எல்ஏக்கள் அறைகளும் சிறியதாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக, முதல்வர் அலுவலகம், முதல்வரின் 4 செயலாளர்கள் அறைகள் ஆகியவை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10- ஆவது மாடிக்கு மாற்றப்பட உள்ளது.
நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10- ஆவது மாடியில்
இதற்கு முன்னதாக இடம் மாற்றம் குறித்து முதல்வர் விஜய் தனது ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அதன்படி, இட நெருக்கடி மற்றும் வாஸ்துபடி சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படியே, முதல்வர் விஜய் சம்மதத்துடன் 10- ஆவது மாடியில் அறைகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இருக்கும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10- ஆவது மாடியிலும் போதிய இடவசதி இல்லை என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் CM விஜய்.. காவிரிப் பிரச்சினைக்கு நேரடி பேச்சுவார்த்தை தீர்வாகுமா?




தலைமை செயலகம் இடமாற்றம்
இதன் காரணமாக தலைமைச் செயலகத்தை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யலாமா என்று ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக கிண்டியில் செயல்பட்டு வரும் ஆளுநர் மாளிகை எதிரே உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் தலைமை செயலகத்தை மாற்றலாமா என்று ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இந்த இடம் தலைமைச் செயலகம் செயல்படுவதற்கு சரியாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வேறு இடத்தை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.
தவெக ஆட்சியில் மீண்டும் தலைமை செயலக இடமாற்றம்
அதன்படி, கடந்த 2006 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி கோட்டையில் இட நெருக்கடி இருப்பதை உணர்ந்து புதிய தலைமைச் செயலகத்தை சட்டமன்றத்துடன் இணைத்து வசதியாக திட்டமிட்டு கட்டினார். இதைத் தொடர்ந்து கடந்த 2010- ஆம் ஆண்டு புதிய தலைமைச் செயலகம் திறந்து வைக்கப்பட்டது. அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றதும் அதனை பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றி, தலைமைச் செயலகத்தை மீண்டும் செயிண்ட் கோட்டைக்கே இடமாற்றம் செய்தார்.தற்போது, தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த நிலையில் மீண்டும் தலைமைச் செயலகத்தை இடமாற்றம் செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: தமிழகத்தின் மொத்த கடன்.. பட்ஜெட்டுக்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்!!