தமிழகத்தில் இன்னும் எத்தனை லாக்அப் மரணங்கள் நிகழும்.. முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!
Nainar Nagendran Condemned Custodial Deaths: தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் லாக்அப் மரணங்களுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தவெக ஆட்சியில் இன்னும் எத்தனை லாக்அப் மரணங்கள் நிகழும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
தூத்துக்குடியில் போலீஸ் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்துக்கு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் தொடர்ந்து காவல் மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த வாரங்களில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பதில் ஏதும் கூறாமல் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார். தூத்துக்குடியில் அமுதா நகரை சேர்ந்த இளைஞர் அருணாச்சலம் தென்பாகம் காவல் நிலையத்தில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் தன்னை தலையில் தாக்கியதாக உயிரிழப்பு அதற்கு முன்பு அருணாச்சலம் அளித்துள்ள மரண வாக்குமூல வீடியோ இந்த கொடூரத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தி உள்ளது.
நாகர்கோவில் இளைஞர் அடித்த கொலை
கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளியான இளைஞர் சபரி வர்மன் சிறை வார்டர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்திருந்தார். இந்த அதிர்ச்சி சம்பவம் அடங்குவதற்குள் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் மீண்டும் ஒரு காவல் மரணம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் இதுபோன்று எத்தனை காவல் மரணங்கள் நிகழும் என்பதை முதல் அமைச்சர் ஜோசப் விஜய் விளக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே அடுத்த அடுத்த நிகழும் இந்த காவல் மரண சம்பவங்கள், தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடர்கதையாக மாறி உள்ளதை நிரூபிக்கின்றன.
மேலும் படிக்க: மீண்டும் ஒரு லாக்அப் மரணம்? தூத்துக்குடியில் போலீசார் விசாரணையில் இளைஞர் உயிரிழப்பு.. நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்!




தென்பாகம் காவலர்கள் மீது நடவடிக்கை
எனவே, இளைஞர் அருணாச்சலம் மரணத்துக்கு பொறுப்பான தென்பாகம் காவல் அதிகாரிகள் மீது உடனடியாக கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அத்துடன் அவர்களை கைது செய்வதோடு மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட அருணாச்சலத்தின் குடும்பத்தினருக்கு தகுந்த நீதியையும், இழப்பீட்டை விரைந்து வழங்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். தூத்துக்குடியில் சட்டத்துக்கு புறம்பாக மது விற்றதாக அருணாச்சலத்தை தென்பாகம் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்த போது தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், மயங்கி விழுந்த அவரை போலீசார் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இளைஞர் உயிரிழப்பில் காவல்துறை விளக்கம்
இதனிடையே, இளைஞர் அருணாச்சலம் காவல் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்ததாகவும், அவர் மீது போலீசார் தாக்குதல் நடத்தவில்லை என்றும், குறிப்பாக லாக்அப் மரணம் நிகழவில்லை என்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. அத்துடன், காவல் நிலையத்தில் இளைஞர் அருணாச்சலம் மயங்கி விழும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
மேலும் படிக்க: தூத்துக்குடி லாக்அப் டெத் சம்பவம்? சிசிடிவி ஆதாரத்துடன் காவல் துறை அதிரடி விளக்கம்.. முழு விவரம் என்ன!