திருச்சி GH-ல் அதிர்ச்சி.. மூதாட்டியின் கால் விரலை கடித்த எலி.. கொதித்தெழுந்த உறவினர்கள்!
Trichy Government Hospital Rat Bites Elderly Woman : திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த மூதாட்டியின் கால் விரலை எலி ஒன்று கடித்தது. இந்த விவகாரம் பரபரப்பான நிலையில் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்து உள்ளது.
திருச்சி மாவட்டம், பொன்மலை அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ் கொடி ( 60 வயது). இவருக்கு மூட்டு வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெறுவதற்காக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், மூதாட்டி தமிழ் கொடி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவ வார்டில் வழக்கத்தை விட எலி தொல்லை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று வியாழக்கிழமை அதிகாலை சுமார் 5 மணி அளவில் கட்டில் மீது படுத்திருந்த தமிழ் கொடியின் கால் விரலை எலி ஒன்று கடித்துள்ளது. இதனால், வலி தாங்க முடியாமல் மூதாட்டி தமிழ் கொடி அலறி துடித்தார். உடனே, சக நோயாளிகள் மற்றும் பணியில் இருந்த செவிலியர்கள் மின் விளக்கை ஆன் செய்து பார்த்தபோது, எலி தப்பி ஓடுவது தெரிய வந்தது.
அரசு மருத்துவமனையில் முறையான பராமரிப்பு இல்லை
இது தொடர்பாக, மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து மூதாட்டிக்கு பரிசோதனை செய்து தேவையான தடுப்பூசிய செலுத்தினர். இது தொடர்பாக மூதாட்டி என் மகன் விஜயகுமார் கூறுகையில், அரசு மருத்துவமனையில் முறையாக பராமரிப்பு இல்லை. எனது தாய் சர்க்கரை நோயாளி ஆவார். அவரது காலில் எலி கடித்தது உடனடியாக அவருக்கு தெரியவில்லை. எலி கடித்ததன் காரணமாக அவரது கால் கட்டை விரலை சுற்றிலும் மருத்துவர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
மேலும் படிக்க: ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துக்களையும் மதிக்க வேண்டும்.. – அரசுக்கு நீதிமன்றம் அறிவுரை




மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
இந்த சம்பவத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் முழு பொறுப்பேற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இது தொடர்பாக திருச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் மூதாட்டி தமிழ் கொடி மூட்டு எலும்பு முறிவு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மூதாட்டிக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது
அவருக்கு நீரிழிவு நோய் உள்ளது. இன்று அதிகாலை மூதாட்டியின் கால் விரலை எலி கடித்துள்ளது. இதில், மூதாட்டிக்கு ஆழமான காயமோ அல்லது ரத்தப்போக்கோ இல்லை. கால் கட்டைவிரல் தோலில் சிராய்ப்புக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மூதாட்டியின் உடல்நிலை சீராகவே உள்ளது. அத்துடன் அவருக்கு ரேபிஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவருக்கு எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் படிக்க: டெல்லியில் இருந்து வந்த அவசர உத்தரவு.. அமித் ஷாவின் புதுச்சேரி பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்!