மீண்டும் ஒரு லாக்அப் மரணம்? தூத்துக்குடியில் போலீசார் விசாரணையில் இளைஞர் உயிரிழப்பு.. நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்!
Thoothukudi Mysterious Youth Dies: தூத்துக்குடி மாவட்டத்தில் தென்பாகம் காவல் நிலையத்தில் போலீசாரின் விசாரணையில் இருந்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில், போலீசார் அடித்ததில் அவர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், அமுதா நகர் 1-ஆவது தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் அருணாச்சலம் ( 24 வயது). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் உள்ள எப். சி. ஐ. குடோன் அருகே சட்ட விரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில், தென்பாக்கம் காவல் ஆய்வாளர் தரண்யா தலைமையிலான போலீசார் அருணாச்சலத்தை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது. திடீரென அருணாச்சலத்திற்கு உடல் நல குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே, அவரை போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, அருணாச்சலத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக நேற்று புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
போலீசார் அடித்ததில் இளைஞர் பலி என புகார்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அருணாச்சலத்தின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அந்த கிராமத்தினர் ஏராளமானோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் தென்பாகம் காவல் நிலையம் முன் திரண்டனர். அப்போது, அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், போலீசாரின் தாக்குதலாலயே இளைஞர் அருணாச்சலம் உயிரிழந்ததாகவும், இதில் தொடர்புடைய காவலர்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அத்துடன், அந்த பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் குவிய வாய்ப்பு?.. மக்கள் நடமாட்டத்திற்கு கடும் கட்டுப்பாடு.. போலீஸ் குவிப்பு!!




உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்
இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பானது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதில், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த இளைஞர் அதிர்ச்சி வாக்குமூலம்
இந்த சம்பவம் குறித்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுனில் அளித்த விளக்கத்தில், இளைஞர் அருணாச்சலம் காவல்துறையின் விசாரணையில் இருந்தபோது, திடீரென மயங்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இளைஞர் அருணாச்சலம் தன்னை போலீசார் தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையாக தாக்கியதாக கூறிய பரபரப்பு வாக்குமூலம் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க: ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துக்களையும் மதிக்க வேண்டும்.. – அரசுக்கு நீதிமன்றம் அறிவுரை