1.75 டன் செம்மரக்கட்டை திருட்டு வழக்கு.. 5 வன ஊழியர்கள் சஸ்பெண்ட்.. திருப்பத்தூர் வன அலுவலர் அதிரடி!
Tirupattur Forest Officials Suspended: திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான 1,750 கிலோ செம்மரக் கட்டைகள் திருடு போன வழக்கில் பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி 5 வன அலுவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட வன அதிகாரி உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழக வனத்துறைக்கு சொந்தமான அரசு சந்தன மர விற்பனை கிடங்கு அமைந்துள்ளது. இங்கு, செம்மர கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் செம்மர கட்டைகள் இந்த விற்பனை கிடங்கில் தான் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு செம்மர கடத்தல் வழக்கில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1,750 கிலோ எடை கொண்ட 55 செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு அரசு சந்தன மர விற்பனை கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த செம்மரக்கட்டைகள் அனைத்தும் கடந்த ஜூலை 18- ஆம் தேதி திடீரென மாயமாக இருந்தன. வனத்துறை அலுவலர்கள் வழக்கமாக மேற்கொள்ளும் கணக்கெடுப்பின்போது சம்பந்தப்பட்ட 55 செம்மர கட்டைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தது.
5 வன அலுவலர்கள் சஸ்பெண்ட்
இந்த சம்பவம் தொடர்பாக திருப்பத்தூர் அரசு சந்தன மர விற்பனை கிடங்கு ஒற்றை பூட்டு அலுவலர் ஜோதிலிங்கம் திருப்பத்தூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி 5 வன அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: தனது கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தை அதிகாரிகளுடன் கண்டுகளித்த முதலமைச்சர் விஜய்..
சஸ்பெண்ட் ஆன 5 வன அலுவலர்கள் விவரம்
இதில், திருப்பத்தூர் சந்தன மர விற்பனை கிடங்கு ஒற்றைப் பூட்டு அலுவலர் ஜோதிலிங்கம், வன காப்பாளர்களான ராமமூர்த்தி, மோகன் குமார், ரேணு மற்றும் வனவர் பரமகுரு ஆகிய 5 ஊழியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசுக்கு சொந்தமான சந்தன மர விற்பனை கிடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் மாயமாக இருப்பது பெரும் பாதுகாப்பு குறைபாட்டை ஏற்படுத்தி உள்ளது. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
அத்துடன், இதில், வன அலுவலர்கள் சிலர் உடந்தையாக இருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் மற்றும் வனத்துறையின் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி 5 வன அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது வனத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்.. 1,750 கிலோ சிவப்பு தங்கம் கொள்ளை.. அரசு கிடங்கில் மர்ம நபர்கள் அத்துமீறல்!

