மது போதையில் அரக்கனாக மாறிய அண்ணன்.. சென்னையில் தூங்கிக்கொண்டிருந்த தம்பி அடித்து கொலை.. பதறவைக்கும் பின்னணி!
Chennai Youth Murder: சென்னையில் மது போதையில் மெத்தையில் படுத்து தூங்கிய தம்பியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த அண்ணனை வடக்கு கடற்கரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பாரிமுனையை சேர்ந்தவர் சிவகுமார் ( 38 வயது). கூலி தொழில் செய்து வருகிறார். இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை ( ஜூன் 7- ஆம் தேதி) தனது அண்ணன் விஜய சாரதியுடன் அந்த பகுதியில் மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது, மது போதையில் சாலையின் ஓரத்தில் இருந்த மெத்தையில் சிவக்குமார் படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது. அப்போது, மது போதையில் இருந்த அவரது அண்ணன் விஜய சாரதி மெத்தையில் இருந்து எழுந்து செல்லுமாறு கூறினாராம். ஆனால், சிவகுமார் மது போதையில் மெத்தையில் இருந்து எழுந்திருக்காமல் அப்படியே படுத்து தூங்கி உள்ளார். இதனால், இருவர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இருவரும் மது போதையில் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி உள்ளனர். இதில், ஆத்திரம் தீராத விஜய சாரதி அருகில் கிடந்த இரும்பு கம்பியால் சிவகுமாரை சரமாரியாக தாக்கினார்.
ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு
இதில், பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இரு நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் இன்று செவ்வாய்க்கிழமை ( ஜூன் 9- ஆம் தேதி) சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் படிக்க: உல்லாசத்துக்கு அழைத்த 64 வயது முதியவர்.. மறுப்பு தெரிவித்த பெண்.. அடுத்து நடந்த நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!




வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
இதைத் தொடர்ந்து, அவரது சடலம் உடல் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக விஜயகுமாரின் பெற்றோர் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை சம்பவம் நிகழ்ந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
தலைமறைவான அண்ணனை கைது செய்த போலீசார்
தொடர்ந்து, கொலை சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்த விஜய சாரதியை தேடி வந்தனர். இதில், அவரது வீட்டில் அருகே உள்ள பகுதியில் பதுங்கி இருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. அதன் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விஜய சாரதியை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: மீண்டும் ஒரு லாக்அப் டெத்? போலீஸ் விசாரணைக்கு சென்ற ஓட்டுநர் உயிரிழப்பு.. எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் நடந்தது என்ன!