டாஸ்மாக் பார்களில் இனி உணவகங்கள் – அமைச்சர் விக்னேஷ் முக்கிய அறிவிப்பு
Restaurants in TASMAC Bars : டாஸ்மாக் பார்களில் இனி வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உணவுக்கூடங்களை அமைத்து நடத்திக் கொள்ளலாம் என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் பார்களின் செயல்பாடுகள் மற்றும் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கோவை , செப்டம்பர் 17: டாஸ்மாக் பார்களில் இனி வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உணவுக்கூடங்களை அமைத்து நடத்திக் கொள்ளலாம் என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் பார்களின் செயல்பாடுகள் மற்றும் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் பார்களில் இனி உணவகங்கள்
இது தொடர்பாக கோயம்புத்தூரில் செப்டம்பர் 17, 2026 இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் பார்களில் நிலவும் சுகாதாரமற்ற உணவுகள் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அங்கே உணவகங்களை நடத்த அரசு அனுமதி அளிக்கத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் வழிகாட்டுதல்கள் மிக விரைவில் வெளியாகும் என்றார்.
இதையும் படிக்க : தமிழக இடைத்தேர்தல் களம்.. மதுராந்தகம், தாராபுரத்தில் பிரதான கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு!




மேலும் பேசிய அவர், நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வரும் டாஸ்மாக் பார் டெண்டர் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் முறைப்படி விடப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். புதிய டெண்டர் விதிமுறைகளின்படி பார்களில் உணவுக்கூடங்கள் அமைக்கப்படுவதன் மூலம், அங்கிருக்கும் உணவுகள் மற்றும் வசதிகளின் தரம் குறித்து அரசு அதிகாரிகளால் நேரடியாகச் சோதனைகள் நடத்த முடியும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், டாஸ்மாக் பார்களில் அடிக்கடி சோதனைகள் மேற்கொள்வதன் மூலம் பார்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க முடியும். என்றார். அமைச்சர் விக்னேஷ் வெளியிட்டுள்ள இந்த அதிரடி அறிவிப்பு தற்போது மதுப்பிரியர்கள் மற்றும் பார்களின் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் உள்ள முறைகேடுகளை தடுக்க, தானியங்கி கருவி மூலம் அவற்றை பெறும் திட்டத்தை 3 மாதத்தில் நடைமுறைபடுத்த இருப்பதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் பதிலளித்த அரசு வழக்கறிஞர், டாஸ்மாக் கடைகளில் தற்போது செயல்பாட்டில் உள்ள பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. இந்த நடைமுறையில் உள்ள குறைகளை முழுவதுமாக நீக்க தானியங்கி கருவியை பயன்படுத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : பெரியார் பிறந்தநாளில் புகழாரம் சூட்டிய அண்ணாமலை.. திராவிட அரசியலை நோக்கிப் பயணமா? அரசியல் களத்தில் பெரும் திருப்பம்!!
மேலும், டாஸ்மாக் கடைகளில் தானியங்கி கருவிகளை நிறுவுவதற்கான டெண்டரை கடந்த ஆகஸ்ட் 31, 2026 அன்று விடப்பட்டுள்ளது. இந்த கருவி மாநிலம் முழுவதும் உள்ள 4,500 டாஸ்மாக் கடைகளிலும் வைக்கப்படும். ஒரு கருவி சுமார் 2,000 பாட்டில்களை தக்க வைக்கும் தன்மை கொண்டது.
இந்த தானியங்கி இயந்திரத்தில் காலி பாட்டில்களை கொடுத்து மொபைல் எண்ணை கொடுத்தால், சம்மந்தப்பட்ட நபரின் வங்கி கணக்குக்கு 10 ரூபாய் பணம் சென்று விடும். யூபிஐ எண் இல்லாதவர்கள், க்யூஆர் கோட் மூலம் ரசீது வழங்கப்படும். அந்த ரசீதைப் பயன்படுத்தி, மீண்டும் மதுபானக் கடையில் கொடுத்து வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.