AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழக இடைத்தேர்தல் களம்.. மதுராந்தகம், தாராபுரத்தில் பிரதான கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு!

Tamil Nadu Bypolls 2026: தமிழகத்தில் வரவிருக்கும் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனையில் முக்கியக் கட்சிகளின் மனுக்கள் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, இரு தொகுதிகளிலும் பிரச்சாரக் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழக இடைத்தேர்தல் களம்.. மதுராந்தகம், தாராபுரத்தில் பிரதான கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 17 Sep 2026 13:08 PM IST

சென்னை, செப்டம்பர் 17: தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போதே உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், இரு தொகுதிகளிலும் பெறப்பட்ட வேட்புமனுக்கள் மீதான அதிகாரப்பூர்வப் பரிசீலனைத் தீவிரமாக நடைபெற்றது. சுயேச்சைகள் மற்றும் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் என இரு தொகுதிகளிலும் ஐந்து முனைப் போட்டி நிலவும் சூழலில், தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு முக்கியக் கட்சிகளின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: பெரியார் பிறந்தநாளில் புகழாரம் சூட்டிய அண்ணாமலை.. திராவிட அரசியலை நோக்கிப் பயணமா? அரசியல் களத்தில் பெரும் திருப்பம்!!

மதுராந்தகத்தில் எதிர்ப்புகளை மீறி வேட்புமனுக்கள் ஏற்பு:

மதுராந்தகம் தொகுதியில் பிரதான கட்சிகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீது எதிர்த்தரப்பு வேட்பாளர்களால் பலமான ஆட்சேபணைகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர்களின் மனுக்களில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறிச் சிக்கல்கள் கிளப்பப்பட்டன. எனினும், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் சட்ட வல்லுநர்கள் அளித்த உரிய விளக்கங்களையும் சான்றுகளையும் ஏற்றுக் கொண்ட தேர்தல் அலுவலர்கள், அனைத்து ஆட்சேபணைகளையும் நிராகரித்தனர். இதன்படி, மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமன், அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் ஆகிய நால்வரின் வேட்புமனுக்களும் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் தொகுதியில் விறுவிறுப்பான பரிசீலனை

அதேபோல, தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா, திமுக வேட்பாளர் சுகன்யா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணன் ஆகியோரின் வேட்புமனுக்கள் எவ்விதச் சிக்கலுமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேலும் அதிமுக வேட்பாளர் பானுமதி மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா ஆகியோரின் மனுக்களும் ஆய்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இரு தொகுதிகளிலுமே திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே ஐந்து முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க: சென்னை OMR அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரம்.. “11-வது மாடியில் வெடித்த ஃபிரிட்ஜ்!”.. தம்பதி உட்பட 3 பேர் படுகாயம்!!

சூடுபிடிக்கும் பிரச்சாரக் களம்:

வேட்புமனுக்கள் பரிசீலனை நிறைவடைந்து தங்களது மனுக்கள் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் நிம்மதி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இன்றைய தினமே தங்களது அதிகாரப்பூர்வப் பிரச்சாரத்தைத் தொடங்க வேட்பாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். கட்சித் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளின் தலைமையில் இரு தொகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்புப் பணிகளை முடுக்கிவிட அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் களம் மிகுந்த சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us